போக்குவரத்து விதிமீறலுக்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் மகன் அபராதம் விதிக்கப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞன் கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, கலகெதர பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை கடக்க முற்பட்ட போது வெள்ளைக் கோட்டைக் கடந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் டிரான் அலஸின் மகன் தவறை ஒப்புக்கொண்டதால், அவருக்கு அபராத சீட்டை வழங்க போக்குவரத்து பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில் அமைச்சரின் மகன் அபராதம் செலுத்த அருகில் உள்ள தபால் நிலையம் எது என்று கேட்டுள்ளார்.
அப்போது பொலிஸார் நடத்திய விசாரணையில் தான் அமைச்சர் டிரான் அலஸின் மகன் என அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் அதனை அறிந்த பொலிஸார், தான் யார் என்று ஏன் கூறவில்லை எனக் கேட்டு, ரூ. 1,100 ஐ அவரிடமிருந்து பெற்று தபால் நிலையத்திற்கு எடுத்துச் சென்று, அபராதம் செலுத்தி, அதற்கான பற்றுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதி பத்திரத்தையும் அமைச்சரின் மகனிடம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.