Thursday, March 28, 2024
Home » கண்டி இலக்கிய இனிய நண்பர்கள் குழும ஏற்பாட்டில் கௌரவிப்பும் பாராட்டும்

கண்டி இலக்கிய இனிய நண்பர்கள் குழும ஏற்பாட்டில் கௌரவிப்பும் பாராட்டும்

முக்கிய கல்விமான்கள் பங்கேற்பு

by damith
December 5, 2023 10:30 am 0 comment

கண்டி இலக்கிய இனிய நண்பர்கள் குழுமத்தின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் மிகப் பில்பல்யமான ஒளிப்படக் கலைஞர் ஜீவராஜ் (ஜீவன்) அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கண்டி விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் எஸ். சிவஞானசுந்தரம் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் சமூகச் செயற்பாட்டாளர் எஸ். பரமேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

இதில் மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாசம், பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ். விஜயச்சந்திரன்,பேராதனை பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எழுத்தாளர் கவிஞர் ரா. நித்தியானந்தன், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஆர். பார்த்தீபன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர் இரா. அ இராமன் நிகழ்ச்சியினை சிறப்புற தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மலையக கலை கலாசார சங்கத்தின் தலைவர் சமூகச்செயற்பாட்டாளர் எஸ் பிரமேஸ்வரன் உரையாற்றும் போது; இலட்சிய வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு செயற்படுகின்றவர்கள் எந்த துறையாக இருந்தாலும் உயர் இலக்கை அடைய முடியும். அந்த வகையில் ஒளிப்படக் கலைஞர் ஜீவன் தனது ஒளிப்படத் துறையின் மூலம் தனது முகவரியை அடையாளப்படுத்தியுள்ளார். அவர் இலங்கையில் வாழ்ந்து விட்டு எங்கேயோ கண்காணாத இடமான கனடாவில் வாழ்ந்தாலும் ஒளிப்படத் துறையில் அதிக நாட்டம் கொண்டு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதன் காரணமாகத்தான் நம் எல்லோர் மனதிலும் இன்னும் அவர் மறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் வெறுமனே ஒரு பல்கலைக்கழக பட்டதாரியாக மாத்திரம் இருந்து விட்டுச் சென்று இருந்தால் அவருடைய பெயர் இந்தளவுக்கு பிரகாசித்து இருக்க முடியாது.

அவர் எடுத்துக் கொண்ட ஒளிப்படத்துறை அவரின் பெயரை ஓங்கச் செய்துள்ளது. அவருடைய கடின உழைப்பு இலங்கையில் மட்டுமல்ல கனடாவிலும் அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அந்த வகையில் எமது கண்டியில் உள்ள கலை இலக்கிய நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒளிப்படத் துறையில் திறமை வாய்ந்த மாபெரும் கலைஞரைப் பாராட்டி கௌரவிப்பது நல்லதொரு விடயம் ஆகும். அந்த வகையில் நானும் சந்தோசம் அடைகின்றேன் என்றார்.

மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பி. பி. சிவப்பிரகாரசம் இங்கு உரையாற்றுகையில்;

ஜீவன் என்னுடைய பல்கலைக்கழக நண்பர். அவர் பற்றிப் பேசுவதென்றால் 1983 களில் நான் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஜீவனோடு வசந்தக் குமார் என்ற நண்பர் இருப்பார். அவரும் கனடாவில் இருக்கிறார். தற்போது ஜீவன் மட்டும்தான் இலங்கை வந்துள்ளார். காரணம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1983 மற்றும் 1984 களில் புகு மாணவர்களது ஒன்று கூடல் திருகோணமலையில் இடம்பெற்றது. அதற்காக அவர் வந்தார். நானும் சென்றிருந்தேன்.

ஜீவன் என்றால் எப்பொழுதும் ஒளிப்படக் கருவியோடுதான் இருப்பார். 1983 களில் உருவங்களைப் பதிவு செய்வதில் யாராவது இருந்திருப்பார்களா என்றால் என்பது எனக்குத் தெரியாது. அவர் அத்துறையில் நிறையப் பரிசில்கள் பெற்றிருந்தார். பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் படித்து இருப்பார்கள். அந்த 2000 பேருக்கும் ஜீவனைத் தெரியும். அவர்கள் ஜீவனிடம் இருப்பார்கள். நாங்கள் எங்களுடன் இருப்போமோ தெரியாது. ஆனால் நாங்கள் ஜீவனிடம் இருப்போம். ஜீவனுடைய கமராவில் ஒளிப்படக் கருவியினுள் இருப்போம். பேராதனைப் பல்கலைக்கழகத்தினுடைய அந்த இயற்கை அழகையும். அங்கு இருக்கக் கூடிய செயற்கையான செயற்பாடுகள் அல்லது விரிவுரையாளர்களுடைய செயற்பாடுகளை தன்னுடைய ஒளிப்படக் கருவிக்குள் உள்வாங்கி அதனை மேலும் பதிப்பித்து தருகின்ற விடயங்கள் எங்களுக்கு ஞாபகம் இருக்கின்றன. அங்கு அவ்வாறு அறிமுகமான எங்களுடைய ஜீவன். மூன்று அல்லது நான்கு வருடங்களாக அங்கே கல்வித் துறையில் ஈடுபட்டார்.

ஜீவன் எங்களோடு படித்த அக்கால கட்டங்கள் மிகப் பெறுமதியானது. அவற்றை மீளவும் நினைவூட்டக் கூடியது என்றார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஆர். பார்த்தீபன் உரையாற்றும் போது;

கனடா எல்லோரையும் வரவேற்கும் ஒரு நாடு. எல்லோரும் கனடாவை நோக்கிப் போய் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கனடா அனுப்புவதாக 80 இலட்சம் ரூபாவை என் நண்பரிடம் சுருட்டிக் கொண்டார். அவர் மட்டக்களப்பிலுள்ள நண்பரிடம் சென்று கடனாக வாங்கிக் கட்டினார். பணத்தை சுருட்டிக் கொண்டவன் சிறையில் வாடுகிறான். இது இன்றைய கனடாக் கனவு. ஜீவன் சிறந்த ஒளிப்படக் கலைஞர். அக்கால கட்டத்தில் ஒளிப்படக் கலைஞர்கள் ரொம்பக் குறைவு. ஒரு நல்ல ஆசிரியர். அவர் கம்பளை சாஹிராக் கல்லூரியில் கற்பித்தார். அவர் ஆசிரியராக இருந்து மாணவர் சமூகத்திற்குப் பெரும் பங்காற்றியிருக்கலாம் என்ற மனக் கவலை அவருக்கு இருக்கிறது.

வாழ்க்கையில் இறைவன்தான் தீர்ப்பு எழுதுவான். யாராக இருந்தாலும் அவர் எங்கு இருக்க வேண்டும். என்ன தொழில் செய்ய வேண்டும். எப்படி இருக்க வேண்டும். வாழ்க்கை ஒரு மாய இன்பம். மிகக் குறுகிய காலம் வாழப் போகின்றோம். இதில் மிகச் சிறந்தது எவை என்றால் அடுத்தவர்களைச் சந்தோசப்படுத்திப் பார்ப்பதுதான் மிகச் சிறந்தது. குறைந்தது அடுத்தவர்களுக்கு உதவி செய்ய முயுமா? செய்து விடுங்கள்.

ஒருவர் இறந்த பின் அவருக்காக புத்தகம் எழுதுவது வாழ்த்துக் கவி பாடுவது என்பதில் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஜீவனோடு கதைத்துக் கொண்டிருக்கின்ற போது அவர் மக்களுக்கு நிறையச் செய்ய வேண்டும் என்ற நல்ல உள்ளம் இருக்கிறது. இவர் கிழக்கு மாகாணத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் மலையகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசையும், ஆர்வமும் இருக்கிறது. இது வரவேற்கத்தக்க விசயம்.

கண்டி விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய அதிபர் எஸ். சிவஞானசுந்தரம் உரையாற்றும் போது; ஒளவையார் பாடலில் கூறும் போது ‘சித்திரமும் கைப் பழக்கம், செந்தமிழும் நா பழக்கம், வைத்த தொரு கல்வி மனப்பழக்கம். கொடையும் நற்பும் தயவும் பிறவிக் குணம்’ என்பார்கள். ஆகவே இங்கு ஜீவன் மூன்று விடயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளார்.

பழைய நட்புக்களைத் தேடி கனடாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து தன்னுடைய நட்பை மேலும் வலுப்படுத்தியது மட்டுமல்லாமல் சமூகப் பணிகளையும் ஆற்றி வருகிறார். இப்படிப்பட்ட சமூகப் பணிபுரிவோர்களைக் காண்பது மிக அரிது. அவர் எங்களுடைய பாடசாலைக்குள் நுழைந்த போது அவர் வசற்படியிலேயே இப்பாடசாலைக்கு ஏதாவது செய்வோம் என்று கூறினார்.

அந்த வகையில் தம் சமூகத்திற்கு கட்டாயம் சேவை செய்ய வேண்டும் என்று வந்திருக்கின்ற ஜீவன், இந்தப் பாடசாலைக்கு ஜீவனாக வர வேண்டும் என்று வரவேற்பதோடு இன்றைய தினம் அவருக்கு பாராட்டு விழாவினை நடத்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆகவே அறம் என்பது மிக முக்கியமான கடமை. எங்களுக்கு அடுத்த பிறவி பற்றி நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் செய்யும் அறமும் தர்மமும்தான் எங்களுடைய அடுத்த பிறவியைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றது என்றார்.

முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் துறை விரிவுரையாளரும் மலையக எழுத்தாளருமான கவிஞர் ரா. நித்தியானந்தன் உரையாற்றும் போது;

நாங்கள் மலையகம் 200 என்ற நிகழ்வில் ஜீவனைக் கௌரவிப்போம் என்று தீர்மானித்திருந்தோம். தவிர்க்க முடியாத காரணத்தில் அது ஒத்தி வைக்கப்பட்டது. எனவே அப்படியான நிகழ்வை நடத்த முடியாமை போய் விட்டதே என்ற ஆதங்கம் இருந்தமையின் காரணமாக எப்படியாவது நாங்கள் ஜீவனின் சிறப்பம்சங்களைப் பேசி பாராட்டி கௌரவித்து வழியனுப்பி வைக்க வேண்டும் என்ற ஆதங்கம் இருந்தமையினால் தான் அவசர அவசரமாக இந்த ஏற்பாட்டைச் செய்ய வேண்டி ஏற்பட்டது. ஏனென்றால் அவர் மிகக் குறுகிய காலத்தில் கனடாவை நோக்கிச் சென்று விடுவார்.

அவருக்கும் எனக்கும் உறவு என்றால் 40 ஆண்டுகளைக் கொண்டது. எனினும் இடைப்பட்ட காலத்தில் முகவரி காணாமற் போய் விட்டோம். 1983, 1984 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுடைய ஒன்று கூடல் நிகழ்வு தொடர்பில் முயற்சிகளை மேற்கொண்ட போது தற்செயலாக அவர் என்னுடைய தொலைபேசி இலக்கத்தை எடுத்துக் கதைக்க ஆரம்பித்து விட்டார். அது புதுமையாக இருந்தது. நாங்கள் நீண்ட நேரம் கதைத்தோம். அதன் பிற்பாடு தான் அவர் கனடாவில் இருப்பதையும் மற்றும் அவர் பற்றிய பல்வேறு விடயங்களை அறிந்து கொண்டேன்.

இரண்டு அருமையான பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவர் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னுமொருவர் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஜீவன் எங்கள் குடும்பத்தோடு உறவு கொண்டவர். என்னுடைய திருமணத்தில் ஒரு சதம் காசு வாங்காமல் அவ்வளவு புகைப்படத்தையும் எடுத்து தந்தவர் இவர்தான். அந்தப் படங்களைப் பார்க்கின்ற போது ஜீவன் ஞாபகம்தான் வரும். அது மாத்திரமல்ல உறவினர் வீடுகளுக்கும் வந்து இவர்தான் படம் எடுப்பார். இங்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பரமேஸ்வரன் என்னுடைய மாணவர். என்னுடைய மாணவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அந்த வகையில் பரமேஸ்வரன் இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார். அவர் உயர்ந்த நிலையில் இருப்பது ரொம்ப பெருமையாக இருக்கிறது.

பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் விஜயச்சந்திரன் உரையாற்றும் போது; ஜீவன் பல்கலைக்கழகத்தில் எல்லோர்களிடத்திலும் நட்பாகக் பழகக் கூடிய ஒருவர். அவர் பல்கலைக்ககழத்தில் படித்தாலும் அவர் பிரபல்யமான படப்பிடிப்பாளர். எங்களுடைய எல்லா நிகழ்வுகளையும் அவர்தான் படம் எடுப்பார். அந்த நிகழ்வுகளை அவருடைய கமராக்குள் அடக்கி வைத்திருந்து ஞாபகமூட்டுகின்ற திறமையுடையவர். அந்தக் காலத்தில் அவரை சிங்கள மாணவர்களாக இருந்தால் என்ன, முஸ்லிம் மாணவர்களாக இருந்தால் என்ன எல்லா மாணவர்களும் அவரை நன்கு தெரியும். எல்லா நிகழ்வுகளிலும் அவர் முன்னிற்பார். அவர் கனடா சென்றிருந்தாலும் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த ஒருவர். நிறையப் பேர் பல்கலைக்கழகத்தில் படிப்பதுண்டு. ஆனால் தொடர்ந்து நட்பைப் பேணுவது இல்லை. ஏனென்றால் தொழில் நிமித்தம் காரணமாக சோலிகள் காரணமாக தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்படுவதில்லை. ஆனாலும் அதற்கப்பாலும் நட்பைப் பேணுபவர்கள் இருக்கின்றார்கள். அதுவும் 40 வருடங்களுக்கு பிறகு நட்பைப் பேணுவது என்பது கடினமான விடயம். குறிப்பிட்ட பெயர்கள் ஞாபகத்தில் இருக்கும். ஆனால் ஜீவனை பெயரைச் சொல்லாமலே ஜீவனைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம். அன்று பார்த்த ஜீவனாகத் தான் இருக்கின்றார்.

கனடாவில் இருந்து வருகை தந்த ஒளிப்படக் கலைஞர் எஸ். ஜீவராஜ் (ஜீவன்) ஏற்புரையாற்றும் போது;

நான் கனடாவுக்கு இடம்பெயர்ந்து சுமார் 30 வருடங்கள் ஆகின்றன. புகைப்படம் என்று பொதுவாக அழைப்பதில்லை. ஒளிப்படம் என்று சொல்வார்கள். ஏனென்றால் புகைப்படம் என்ற சொல் இல்லாமற் போய் இப்பொழுது ஒளிப்படம் என்று அழைக்கின்றார்கள். நான் புகைப்படம் எடுக்கின்ற காலப்பகுதி சுருள் நாடாவில் ஒளிப்படங்களை கழுவும் காலம். அப்பொழுது விரும்பின மாதிரி நாங்கள் படம் எடுக்க முடியாது. புகைப்படச் சுருள்கள் விலை உயர்ந்தவை. ஆகவே அவற்றைக் கவனமாகப் பார்த்துத்தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். இப்பொழுது எடுத்தவுடன் பார்க்கின்ற வசதி கூட இல்லை. எடுக்கும் போது முதல் கவனமாக எடுக்க வேண்டும். என்ன காட்சிகள் உள்ளடக்கப்பட வேண்டும். என்னென்ன காட்சிகள் உள்ளடக்கப்படக் கூடாது என்று இருக்கிறது. அதற்குரிய முறைப்படி எடுக்க வேண்டும. எவ்வாறு படம் எடுக்க வேண்டும் என்கின்ற பல விதிமுகைள் இருக்கின்றன. அதற்கு ஏற்ற வகையில் எடுக்க வேண்டும்.

நான் கனடாவில் வாழ்ந்தாலும் எமது இலங்கை வாழும் எமது சமூகத்தின் தொப்புள் கொடி உறவுகளின் நல்வாழ்வுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் கல்வி மேம்பாட்டுக்காகவும் அயராது பாங்காற்ற தயாராகவுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ். பரமேஸ்வரன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT