சீரற்ற காலநிலை காரணமாக காசல் ரி, கெனியோன், மவுசாக்கலை, லகஷப்பான, நவலக்ஸபான, பொல்பிட்டிய, மேல்கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வான் பாயும் அளவினை எட்டியுள்ளன. நேற்றுமுன்தினம் 03 மாலை முதல் நோட்டன் பிரிஜ் பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருகின்றன.
மழை காரணமாக ஏனைய நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்து எந்த வேளையிலும் வான் கதவுகள் தன்னிச்சையாக திறக்கப்படலாம் எனவும் அணைக்கட்டுக்கு மேலாக வான் பாயலாம் எனவும் நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயமிக்க பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை ஹற்றன்- கொழும்பு மற்றும் ஹற்றன்- நுவரெலியா பிரதான வீதியிலும் ஹற்றன்- கண்டி பிரதான வீதியிலும் பல இடங்களில் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் பல பகுதிகளில் மண்சரிவு அபாயமும் காணப்படுவதுடன் சீரற்ற காலநிலையுடன் பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களுக்கு உரிய பக்கத்தில் எச்சரிக்கையுடன் பயணிப்பதன் மூலம் விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
(ஹற்றன் விசேட நிருபர்)