Friday, April 19, 2024
Home » விசேட பயிற்சியூடாக வட பிராந்திய கிரிக்கெட்டுக்கு வலு

விசேட பயிற்சியூடாக வட பிராந்திய கிரிக்கெட்டுக்கு வலு

by Rizwan Segu Mohideen
December 4, 2023 2:11 pm 0 comment

இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு என்பது தேசத்தை ஒன்றிணைக்கும் நேர்த்தியான பெருமைக்குரிய அங்கமாக அமைந்துள்ளது. தேசத்தை ஒரே அணி, ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்து, குதூகலமாக, மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்யும் விளையாட்டாகவும் அமைந்துள்ளது. தற்போது எமது தேசத்தின் கொடி மீண்டும் உயரப் பறப்பதை காண முழு நாடுமே பலத்த எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. உலகக் கிரிக்கெட்டில் மீண்டும் எமது வெற்றியை சுவைப்பதற்கு, புதிய திறமைசாலிகளை நாம் இனங்காண வேண்டியுள்ளதுடன், அவர்களுக்கு திறன்களை கட்டியெழுப்பிக் கொள்ள வாய்ப்புகளை வழங்க வேண்டியுள்ளது. 

2014 ஆம் ஆண்டில், நாடு முழுவதிலுமிருந்து இளம் கிரிக்கெட் திறமைசாலிகளை இனங்காணும் பயணத்தை டோக்கியோ சீமெந்து குழுமத்தின் Foundation of Goodness ஆரம்பித்திருந்தது. சிறந்த பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்களின் வழிகாட்டல்களின் கீழ் இளம் வீரர்களுக்கு தமது திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்காக மாதாந்தம் கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. நாட்டின் பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த இளம் திறமையான பாடசாலை கிரிக்கெட் வீரர்களுக்கு, விளையாட்டில் தமது கனவை நனவாக்கிக் கொள்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது இந்தத் திட்டத்தின் இலக்காகும். Foundation of Goodness இன் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் அமைந்துள்ள சீனிகம மற்றும் ஹிக்கடுவ பகுதிகளில் இந்த மாதாந்த பயிற்சி முகாம் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. புகழ்பெற்ற கிரிக்கெட் பயிற்றுவிப்பாளரான ஹேமந்த தேவப்பிரியவினால் இந்த பயிற்சி அமர்வுகள் முன்னெடுக்கப்படுவதுடன், 13 முதல் 19 வரையான பாடசாலை மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர். தென் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட கிரிக்கெட் முகாம்கள் வெற்றிகரமானதாக அமைந்திருந்ததைத் தொடர்ந்து, 2017 ஆம் ஆண்டில் வட பிராந்தியத்துக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை டோக்கியோ சீமெந்து வியாபித்திருந்தது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பல இளம் கிரிக்கெட் வீரர்களை இந்தத் திட்டம் உள்வாங்கியது.

Foundation of Goodness இன் விளையாட்டுப் பணிப்பாளர் அனுர டி சில்வா, இந்தத் திட்டத்துக்கு தலைமைத்துவமளிப்பதுடன், தேசத்துக்கு பெருமை சேர்க்கக்கூடிய 50 வட பிராந்திய இளைஞர்களை தெரிந்து, அவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு இந்தத் திட்டத்தினூடாக எதிர்பார்த்துள்ளார். வட பிராந்தியத்தில் காணப்படும் திறமைகளை இனங்கண்டதன் பின், சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களினால் இலங்கை கிரிக்கெட் வலுவூட்டப்பட்டிருந்தது. கிராமியமட்டத்தில் இனங்காணப்படாமல் பல திறமைசாலிகள் காணப்படுகின்றனர். எதிர்காலத்தில் எமது கிரிக்கெட் வரலாற்றை செதுக்கக்கூடிய இந்த நட்சத்திரங்களை வெளிக் கொண்டுவருவது எமது எதிர்பார்ப்பாகும்.” என்றார். வட பிராந்தியத்தின் திறமை வெளிப்பாடானது, எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் இலங்கையின் கிரிக்கெட்டில் வசந்த காலத்தை தோற்றுவிக்கக்கூடிய நம்பிக்கையை வழங்குவதாக அமைந்துள்ளது. 

கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவது தொடர்பில் டோக்கியோ சீமெந்து குழுமம் தொடர்ச்சியாக தனது ஆதரவை வழங்கி வருகின்றது. சமூக மற்றும் புவியியல்சார் இடைவெளியை நிவர்த்தி செய்து, பாலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக கிரிக்கெட்டின் உண்மையான கண்ணியத்தன்மை வெளிப்படுத்தப்படும் என்பதில் நிறுவனம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது. டோக்கியோ சீமெந்தின் மேற்பார்வையின் கீழ் Foundation of Goodness இனால் முன்னெடுக்கப்படும் பயிற்சி முகாம்களினால் இதுவரையில் 1000 க்கும் அதிகமான பாடசாலை மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பல தேசிய மட்ட வீரர்கள் தயார்ப்படுத்தப்பட்டு, உலக கிரிக்கெட் அரங்கில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுமுள்ளனர். நாட்டின் ஒவ்வொரு பாகத்தையும் சேர்ந்த இளைஞர்களுக்கு கிரிக்கெட்டில் ஒன்றிணைய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதனூடாக, சகோதரத்துவத்துக்கான அடித்தளம், மதிப்பளிப்பது தொடர்பான புரிந்துணர்வு போன்றவற்றுக்கான அடித்தளத்தை நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு நிர்மாணத் துறையில் முன்னோடி எனும் வகையில் டோக்கியோ சீமெந்தின் எதிர்பார்ப்பான தேசத்தை கட்டியெழுப்புதல் என்பதற்கு பங்களிப்பு வழங்கப்படுகின்றது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT