‘நாங்கள் பலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்தும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றோம்’ என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், 32 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்கள் எகிப்தின் அல் அரிஷ் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உதவிப் பொருட்களில் கூடாரங்கள், தார்ப்பைகள், அடிப்படை சுகாதாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் என்பன அங்கியுள்ளன.
அதேநேரம் காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள தரைவழி இராணுவ நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு 38 தொன் மனிதாபிமான உதவிகளை இந்தியா ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.
பிராந்தியத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்ஷி,
காஸாவில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளில் பொதுமக்களின் உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருகிறது.
மனிதாபிமான சட்டம் கடைபிடிக்கப்பட வேண்டும், மோதலில் சிக்கியவர்களுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்குவதற்கான எந்தவொரு முயற்சியையும் ஊக்குவிப்பதன் அவசியத்தை இந்தியா எப்போதும் கோடிட்டுக் காட்டுகிறது என்றும் குறிபபிட்டுள்ளார்.