Friday, March 29, 2024
Home » உளுந்து இறக்குமதி தடை நீக்கப்படும்

உளுந்து இறக்குமதி தடை நீக்கப்படும்

by damith
December 4, 2023 7:20 am 0 comment

உளுந்து, பாசிப்பயறு போன்ற தானியங்கள் மீதான மாபியாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ, நிதி மற்றும் விவசாய அமைச்சுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இறக்குமதி தடையை நீக்கி, அரசாங்கத்தினூடாக அவற்றை இறக்குமதி செய்து, குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஒருவார காலத்தினுள் உரிய தீர்மானம் எடுக்கப்படுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வர்த்தக, கைத்தொழில் அமைச்சுகள் மீதான வரவு -செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தின் போது, இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அமைச்சர்,

“நாட்டில் 400 அல்லது 450 ரூபாவுக்கு விற்பனை செய்யக்கூடிய உளுந்து மற்றும் பாசிப்பயிறு ஒரு கிலோகிராம் 1,500 ரூபாவிலிருந்து 1,600 ரூபாவரை விற்பனையாகின்றன. துறைமுகத்தினூடாகவே இவை நாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன. எனினும், அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய வரியும் இதனால் கிடைப்பதில்லை. உள்ளூர் விவசாயிகளும் பாதுகாக்கப்படுவதில்லை. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இவற்றுக்கான இறக்குமதி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இத்தடையை நீக்க வேண்டுமென்று நாம் ஆலோசிக்கிறோம். அரசாங்கத்துக்கு வரியைப் பெற்றுக்கொண்டு அவற்றை இறக்குமதி செய்ய வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு.

தமிழ் மக்களின் முக்கிய உணவான உளுந்து விலை தொடர்பாக பெரும் பிரச்சினை காணப்படுகிறது.ஒருவார காலத்தினுள் இது தொடர்பாக உரிய தீர்மானம் எடுக்கப்படுமென்பதை நான் உறுதியாக தெரிவிக்கின்றேன்.

நிதி அமைச்சே இறக்குமதிக்கான தடையை விதித்திருந்தது. அந்த வகையில், நிதி அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒருவார காலத்தினுள் உரிய தீர்வு எட்டப்படும்” என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT