Saturday, April 20, 2024
Home » தாழமுக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து 330 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது

தாழமுக்கம் யாழ்ப்பாணத்திலிருந்து 330 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது

- சூறாவளியாக வலுவடையும் சாத்தியம்; வடக்கு தமிழ்நாடு கரையை நோக்கி நகரும்

by Rizwan Segu Mohideen
December 3, 2023 9:32 am 0 comment

– நாட்டின் பல பகுதிகளிலும் மேகமூட்டமான  வானம்
– சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம்  நேற்று (02) இரவு 11.30 மணிக்கு வட அகலாங்கு 11.20 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 82.70 E இற்கும் அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக ஏறத்தாழ 330 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. அது அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது .

இத் தொகுதி இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக நாட்டை விட்டு விலகி நாளை (04) வடக்கு தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதன் பின்னர், வடக்குத் திசையில் ஒரு சூறாவளியாக நகர்ந்து நாளைமறுதினம் (05) அளவில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கக் சாத்தியம் காணப்படுகின்றது.

இன்றையதினம் (03) நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ  இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவாமாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும்காலிமற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT