தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், ரி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த மூன்று தொடர்களிலும் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹித் ஷர்மா தலைமையில் டெஸ்ட் அணியும், கே.எல். ராகுல் தலைமையில் ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையில் ரி20 அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலிருந்து சற்று ஓய்வு வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கொஹ்லி ஆகியோர் டெஸ்ட் அணியில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன், திலக் வர்மா, ரஜத் படிதார் என இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காயத்தின் தன்மையைப் பொறுத்து ஷமி விளையாடுவது உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து பாண்டியா இன்னமும் மீண்டு வராத நிலையில், இந்திய ரி20 அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ் மீண்டும் தேர்வாகியுள்ளார்.
ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர்கள் குழுவின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களது முதல் பணியாக தென்னாபிரிக்க பயணம் அமையப்போகிறது. ரி20 தொடர் டிசம்பர் 10, 12 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் டிசம்பர் 26ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் கேப்டவுனில் ஜனவரி 3ஆம் திகதியும் நடைபெறுகிறது.