இலங்கை கிரிக்கெட் அணியின் உடல் சிகிச்சை நிபுணர் கிறிஸ் கிளார்க் ஐரன்ஸ் மற்றும் உடல் செயல்திறன் முகாமையாளர் கிரான்ட் லுடன் பதவி விலகியுள்ளனர்.
இவர்களுக்கு வழங்கப்பட்ட இரு ஆண்டு பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னரே தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டவரான கிறிஸ் கிளார்க் இந்த ஆண்டு ஜனவரியிலேயே இலங்கை அணியின் உடல் சிகிச்சை நிபுணராக பதவி ஏற்றார். இலங்கை அணியுடன் இணைவதற்கு முன்னர் அவர் இங்கிலாந்தின் எசெக்ஸ் கழக அணியின் மருத்துவக் குழு தலைவராக செயற்பட்டுள்ளார்.
மறுபுறம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கிரான்ட் லுடனின் ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கை அணியுடன் இணைவதற்கு முன்னர் 2014 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு, உடல் தகுதி தொடர்பில் செயற்பட்டு வந்தார். பாகிஸ்தான் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராகவும் அவர் செயற்பட்டுள்ளார்.
எனினும் இந்தியாவில் அண்மையில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி மோசமான ஆட்டத்தை வெளியிப்படுத்திய நிலையில் அணியின் பயிற்சிக் குழாத்தின் மீது அதிருப்தி அதிகரித்துள்ளது. குறிப்பாக உலகக் கிண்ணத்திற்கு முன்னரும் உலகக் கிண்ணத்தின்போதும் இலங்கை அணியின் பல வீரர்களும் உபாதைக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.