அமெரிக்காவின் ஒக்லாஹோமா மாநிலத்தில் இரு கொலைகளை செய்த 59 வயது ஆடவர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தக் கொலைகளை தற்காப்புச் செய்ததாக அந்த ஆடவர் வாதிட்டு வந்தார். மக்கலெஸ்டர் நகரில் இருக்கும் ஒக்லாஹோமா மாநில சிறைச்சாலையில் கடந்த வியாழக்கிழமை (30) விச ஊசி செலுத்தப்பட்டு பிலிப் ஹன்கொக் என்ற அந்த ஆடவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒக்லாஹோமாவின் மன்னிப்பு மற்றும் பரோல் சபை பிலிப்புக்கு பொது மன்னிப்பு வழங்கியபோதும் மாநில ஆளுநர் கெவின் ஸ்டிட் அதனை நிராகரித்துள்ளார்.
பைக்கர் குழுவைச் சேர்ந்த ரொபட் ஜெட் மற்றும் ஜேம்ஸ் லைன்ச் ஆகியோரை கொலை செய்ததற்காக பிலிப்புக்கு 2001 ஏப்ரலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த இருவரும் தம்மை கூண்டு ஒன்றுக்குள் அடைக்க முயன்றதை அடுத்தே அவர் மீது சூடு நடத்தியதாக பிலிப் குறிப்பிட்டார். அமெரிக்காவில் இந்த ஆண்டு 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.