அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை மசகு எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 10 இலட்சம் பீப்பாய் அளவு குறைக்க உள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது. சார்வதேச சந்தையில் குறைந்து வரும் மசகு எண்ணெயின் விலையை அதிகரிக்க எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக் பிளஸ்) எண்ணெய் உற்பத்தியை குறைத்தும் பலன் அளிக்காததால் சவூதி இம்முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து சவூதி அரேபிய எரிசக்தித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளொன்றுக்கு 10 இலட்சம் பீப்பாய் அளவு எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதம் வரை இது அமுலில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் ஜனவரி மாதம் ஒபெக் பிளஸ் கூட்டமைப்பில் பிரேசில் இணையவுள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.