புதியவற்றை வாங்காமல் வாடகைக்கு பெறுவது சிறந்தது
பத்தாண்டுகளுக்கு மேல் பழைமையான அரச வாகனங்களை ஏலத்தில் விட்டு, அரசுக்கு தேவையான வாகனங்களை வாடகை அடிப்படையில் பெற வேண்டுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர்,கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
நவம்பர் 19 ஆம் திகதி சர்வதேச பாதிக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, தேசிய வீதி பாதுகாப்பு சபையினால் செயல்படுத்தப்பட்ட வீதி விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் வீதி விபத்துக்களினால் பாதிக்கப்பட்டு நிரந்தர ஊனமுற்ற இருபத்தைந்து பேருக்கு 37,50,000 ரூபா வழங்கப்பட்டது.
நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து விபத்து மற்றும் விபத்துக்குப் பின்னரான முகாமைத்துவம் தொடர்பான விசேட விரிவுரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஐ. . ஜாகொடவினால் நிகழ்த்தப்பட்டது. இங்கு பேசிய அமைச்சர், தற்போது அரசிடம் சுமார் 84,247 வாகனங்கள் உள்ளன. இவற்றில் 47,074 வாகனங்கள் அதாவது 56 வீதம் பத்து வருடங்களுக்கும் மேற்பட்ட பழமையானவை. எனவே, இவை கராஜ் உரிமையாளர்கள், வாகனம் பழுதுபார்ப்பவர்கள் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பத்து ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்கள் அனைத்தையும் தனியாருக்கு ஏலத்தில் விற்று, அரசுக்குத் தேவையான நவீன வாகனங்களை வாங்காமல், தேவைக்கேற்ப வேறு தரப்பினரிடம் வாடகை அடிப்படையில் பெறுவது காலத்துக்கு உகந்தது.
இதனால் அரசுக்கு பெருமளவு பணம் மீதமாகும். தற்போதும் தனியார் துறையில் சுற்றுலா விடுதிகள் உள்ளிட்ட வணிகர்கள் வாடகை அடிப்படையில் வாகனங்களை பெற்று வருகின்றனர். எனவே, ஒரு நல்ல வாகனத்தை பராமரிக்கவும், நல்ல வீதி கட்டமைப்பை பராமரிக்கவும், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வளர்த்து, 2024 ஆம் ஆண்டை சாலை விபத்துகளை குறைக்கும் ஆண்டாக மாற்ற அனைவரும் உறுதியளிக்க வேண்டுமென்றார்.