வளப்பற்றாக்குறை நிலவும் வைத்தியசாலையில் அரசின் கவனம் அவசியம்
சுகாதாரத்துறைக்காக அரசாங்கம் ஒதுக்கும் நிதி எவ்வித பாரபட்சமுமின்றி மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு சம அளவில் செலவிடப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சபையில் தெரிவித்தார்.
சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றிய அவர், சுகாதாரத் துறையின் தேசிய கொள்கை மலையகத்திலும் பின்பற்றப்படுகிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான செலவினத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளன. இருந்தபோதும் தற்போது அந்த வைத்தியசாலைகளில் பாரிய வளப்பற்றாக்குறை காணப்படுகின்னறன. எனவே,
சுகாதாரத்துறையில் மலையகத்தைப் புறக்கணிக்க வேண்டாம்.
பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள அரச வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதை விடுத்து அவற்றை மூடுவதற்கே அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.இதை கவலையுடன் தெரிவிக்க வேண்டியுள்ளது.
சுகாதாரத் துறையின் தேசிய கொள்கை மலையகத்திலும் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வி நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
.பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ள நிலையிலும், அங்கு பாரிய வளப்பற்றாக்குறை காணப்படுகிறது.
2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரத்தினபுரி, பதுளை, கேகாலை , நுவரெலியா,கண்டி,மாத்தளை உள்ளிட்ட பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள 51 தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தது. பின்னர் இவற்றில் பெரும்பாலான வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.சுகாதாரத்துறையில் மலையகத்தை புறக்கணிக்க வேண்டாம்.
மலையகத்தில் தாய் – சேய் மரணம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. மலையகத்தில் வீதிகள் சீரமைக்கப்படாத காரணத்தால் கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதும் பாரிய பிரச்சினையாக உள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்