Home » அரைநூற்றாண்டு கடந்தும் அழியாத நாமம் மர்ஹூம் ஏ.எம்.ஏ. அஸீஸ்

அரைநூற்றாண்டு கடந்தும் அழியாத நாமம் மர்ஹூம் ஏ.எம்.ஏ. அஸீஸ்

by sachintha
December 1, 2023 6:18 am 0 comment

யாழ் சோனகத் தெருவில் சட்டத்தரணியும் காதியாருமான அபூபக்கர்- சுல்தான் முஹம்மது நாச்சியா தம்பதியினருக்கு மூத்த புதல்வராக ஏ.எம்.ஏ. அஸீஸ் 1911 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி பிறந்தார்.

ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் தகப்பனார் அபூபக்கர் அவர்கள் புகழ் பெற்ற புலவர் திலகம் சு.மு. அஸனா லெப்பையின் சகோதரராவார். தந்தை அபூபக்கர் யாழ் நகரசபை உறுப்பினராக பல வருடங்கள் சேவையாற்றினார். 1941 இல் யாழ்ப்பாண நகரசபையில் உபதலைவர் பதவியையும் வகித்தவர்.

1921 இல் வண்ணார்பண்ணை இராமகிருஷ்ண மிஷன் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் தமது கல்வியை அஸீஸ் ஆரம்பித்தார். கல்வி, ஒழுக்கம், நற்பண்புகளின் வளர்ச்சி என்பவற்றில் தம்மை சிறப்பாக வழிநடத்திய கல்வி நிலையம் என வைத்தீஸ்வரா வித்தியாலயம் பற்றி அஸீஸ் தமது குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் அஸீஸின் இடைநிலைக்கல்வி யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் 1923 இல் 06 ஆம் வகுப்பில் ஆரம்பமானது. 1929 இல் அவர் பல்கலைக்கழக பிரவேசத்திற்காக தேர்ந்தெடுக்கப்படும் வரை அவரது கல்வி வாழ்வு யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் நீடித்தது. வீட்டுச் சூழலும் வைத்தீஸ்வரா மற்றும் இந்துக் கல்லூரி பிரவேசங்களும் அஸீஸ் தமிழிலும் நல்ல பயிற்சியை பெற்றுக்கொள்ள வாய்ப்பை அளித்தன. 1929 இல் இலங்கை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்று துறையை சிறப்பு பாடமாக தெரிவு செய்து 1933 இல் வரலாற்றில் (B.A.,Hons) சிறப்புப் பட்டத்தை பெற்றார். இலங்கை அரசாங்கம் 1933 இல் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புனித கத்தரின் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் மேற்படிப்பை தொடர்வதற்கு புலமைப் பரிசில் வழங்கியது. அவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். இவர் இலங்கை சிவில் சேவையாளருக்கான தேர்விலும் சித்தி பெற்றார். இலங்கை நிர்வாக சேவையில் சித்தியடைந்த முதலாவது முஸ்லிம் இவரே ஆவார்.

1942 இல் அஸீஸ் உதவி அரசாங்க அதிபராக கல்முனையில் சேவையில் இருக்கும் காலத்தில் அரசாங்க கடமைகளோடு, பொதுநல ஈடுபாடு, மக்கள் சேவை, வரலாற்று ஆய்வுகளுக்கான தகவல்களை சேகரித்தல் போன்ற பல பணிகளை அவர் முன்னெடுத்தார். இக்கால கட்டத்தில் சுவாமி விபுலானந்தருடனும், இஸ்லாமிய மற்றும் கல்வி எழுச்சிகளையும் பற்றி பாடிவந்த மூத்த முஸ்லிம் கவிஞரான காத்தான்குடி அப்துல் காதர் லெப்பையுடனும் நெருக்கமான உறவுகளை வைத்திருந்தார்.

1943 இல் அஸீஸ் மாற்றலாகி கண்டியில் தனது பணிகளை ஆரம்பித்தார். அவர் இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தை (YMMA) ஸ்தாபிப்பதிலும் வெற்றி கண்டார்.

1945 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் கல்விச் சகாய நிதி (Ceylon Muslim Scholarship Fund) என்ற நிதி நிறுவனத்தை கொழும்பில் உருவாக்கினார்.

அஸீஸ் அவர்கள் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அதிபராக 1948 ஆம் ஆண்டிலிருந்து 1961 வரை பணியாற்றினார்.

1952 இல் அஸீஸ் அகில இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்த போது ஸ்மித் – மண்ட் புலமைப் பரிசில் பெற்று அமெரிக்காவில் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றுத் திரும்பினார்.

அவர் 1952 தொடக்கம்1963 வரை செனட்டராகவும் பணிபுரிந்தார். 1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி காலமாகும் வரை கல்விக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் பொதுநல சேவைகளுக்காகவும் தனது வாழ்வையே அர்ப்பணித்திருந்தார்.

ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களை கௌரவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கம் 1986 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி முத்திரை வெளியிட்டது. ஏ.எம்.ஏ. அஸீஸ் காலமாகி 50 வருடங்கள் கடந்தும் அவரது நாமம் நிலைத்திருக்கின்றது.

கலாபூஷணம் பரீட் இக்பால்…

யாழ்ப்பாணம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT