காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களால் கொல்லப்பட்ட 160 பேரின் உடல்கள் கடந்த 24 மணி நேரத்தில் இடிபாடுகள் மற்றும் வீதிகளில் இருந்து மீட்கப்பட்டதாக காசா அரச ஊடக அலுவலகம் நேற்று முன்தினம் (28) தெரிவித்தது.
கைகளாலும் பழமையான முறைகளை பயன்படுத்தியும் இந்த உடல்களை மீட்டதாக அது குறிப்பிட்டுள்ளது. இதன்படி காசா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 15,000ஐ தாண்டியுள்ளதோடு இதில் 6,150 சிறுவர்கள் மற்றும் 4,000இற்கும் மேற்பட்ட பெண்கள் அடங்குகின்றனர்.
எவ்வாறாயினும் காசாவில் சுமார் 6,500 பேர் வரை காணாமல்போயுள்ளனர். தொடர்ந்து பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் இவர்களின் நிலை குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை. காசாவில் போர் நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் மீட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வாறு இடிபாடுகளில் சிக்கி இருக்கும் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேலிய தாக்குதலில் 300,000 வீடுகள் சேதம் அடைந்திருப்பதோடு அதில் 50,000 வீடுகள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
போர் நிறுத்தம் அமுலில் இருந்தபோதும் தெற்கு காசாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் வடக்கு காசாவில் உள்ள தமது வீடுகளுக்கு திரும்புவதை இஸ்ரேலிய இராணுவம் தடுத்து வருகிறது.