பிரீமா நிறுவத்தின் அனுசரணையில் இலங்கை கிரிக்கெட் சபையால் நடத்தப்பட்ட 15 வயதுக்கு உட்பட்ட இலங்கை இளையோர் லீக் கிரிக்கெட் தொடரில் கொழும்பு வடக்கு அணியை 87 ஓட்டங்களால் வீழ்த்தி கொழும்பு தெற்கு அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
கொழும்பு எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று (29) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு தெற்கு அணி ரெஹான் பீரிஸின் அபார சதத்தின் உதவியோடு 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ஓட்டங்களை பெற்றது. இதன்போது றோயல் கல்லூரியைச் சேர்ந்த ரெஹான் பீரிஸ் 128 பந்துகளில் 129 ஓட்டங்களை பெற்றார்.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய கொழும்பு வடக்கு அணி 47.1 ஓவர்களில் 170 ஓட்டங்களுக்கே சுருண்டது. அதிகபட்சமாக எஸ். சில்வா 47 ஓட்டங்களை பெற்றார். ஜே. தம்ஹிரு 10 ஓவர்களுக்கும் 42 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கொழும்பு தெற்கு அணி ஆரம்ப சுற்றில் ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றியீட்டி தோல்வியுறாத அணியாகவே சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.