Tuesday, March 19, 2024
Home » ‘கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்திற்கு’ ரூ. 1,500 மில்லியன் ஒதுக்கீடு

‘கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்திற்கு’ ரூ. 1,500 மில்லியன் ஒதுக்கீடு

- உள்ளூராட்சி மன்ற பங்களிப்புடன் சுற்றுலா அபிவிருத்தி வசதிகளை மேம்படுத்த ரூ. 1,000 மில்லியன்

by Rizwan Segu Mohideen
November 29, 2023 8:48 pm 0 comment

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ‘கண்டி பெருநகர அபிவிருத்தி திட்டத்தின்’ கீழ் 1500 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்துள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கான விசேட வேலைத் திட்டமாக உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் வசதிகளை மேம்படுத்த ரூ. 1,000 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர,

நாம் 2024 ஆம் ஆண்டு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை நிறைவுசெய்யப்படாத விடயங்களை நிறைவுசெய்யவும் அதேபோன்று, 9 மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 34,000 மில்லியன்களுக்கும் அதிகமான தொகையில் அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து எதிர்வரும் வருட இறுதிக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவு செய்யவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

குறிப்பாக வடக்கு, வடகிழக்கு, ஊவா, மற்றும் வடமத்திய மாகாணங்களில் மேலும் சுமார் 7,000 மில்லியன்கள் செலவில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும், முன்பள்ளி முதல் பாடசாலைகள் வரை, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இதுபோன்ற அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, மேலும் சுமார் 600 மில்லியன்கள் செலவில் உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும் அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். தற்போது எமது நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருவதால் உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்றாக சுமார் 1,000 மில்லியன்களை ஜனாதிபதி ஒதுக்கியுள்ளார். அந்த நிதியுடன் சேர்த்து உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்புடன் 1500 மில்லியன்கள் செலவில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த மாநகர சபைகளுக்கு 50% நாம் வழங்கவுள்ளோம். அதேபோன்று நகர சபைகளுக்கு 70% வழங்க எதிர்பார்த்துள்ளோம். முன்னேற்றமடையாத உள்ளூராட்சி மன்றப் பிரதேசங்களுக்கு அவசியமான நிதியை முழுமையாக வழங்கி அபிவிருத்தி செய்யவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் செல்லக்கூடிய, விசேடமாக நீர்வீழ்ச்சிகள் அமைந்துள்ள இடங்கள் போன்ற பிரதேசங்களில் அவசியமான வசதிகளை மேம்படுத்தவும் தற்போது நாம் திட்டமொன்றை வகுத்துள்ளோம். அதேபோன்று, புனிதஸ்தலங்கள் அமைந்துள்ள பிரதேசங்களைத் தரிசிக்க வருகை தருபவர்களுக்கான வசதிகளை அபிவிருத்தி செய்யவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். இவ்வாறு, குறுகிய காலத்தில் பல்வேறு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க நாம் திட்டமிட்டு வருகின்றோம்.

மேலும், எந்த அமைச்சர் அடிக்கல் நாட்டிய திட்டங்களாக இருந்தாலும் அந்தப் பணிகளை நாம் நிறைவ செய்து வருகிறோம். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே எமது கொள்கையாகும்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ‘கண்டி பெரு நகர அபிவிருத்தித் திட்டத்தின்’ கீழ் 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ள 3,000 அரச ஊழியர்களின் மேன்முறையீட்டு மனுக்களை பரிசீலித்து மீண்டும் அவர்களை சேவையில் அமர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளோம். அதற்கான அனுமதி கிடைத்ததும், எந்தவித அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையின் கீழ் அவர்கள் ஒரு மாத காலத்திற்குள் பணியில் அமர்த்தப்படுவர்.

மேலும், வெற்றிடமாக உள்ள சுமார் 2,700 கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான பரீட்சை எதிர்வரும் 02 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதிக்கு முன்னர் அவர்களை பணியில் அமைர்த்தவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், உள்ளூராட்சி மன்றங்களில் உள்ள 8,400 தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.’ என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT