அக்கரைப்பற்றில் சம்பவம்
கொள்ளை நாடகம்; மோ. சைக்கிளில் சென்றவர் பலி
அக்கரைப்பற்றில் சம்பவம்
அக்கரைப்பற்று பிரதேசத்தில் ரூபா 85 இலட்சம் பணத்தை திருடி சென்றுள்ளதாக நாடகமாடிய சந்தேகநபர்கள் இருவரை அக்கரைப்பற்று பொலிசார் நேற்று(15) இரவு கைது செய்தனர்.
அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் நேற்று (16) இரவு 9.00 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றின் ஒரு பக்க கண்ணாடியை உடைத்த இருவர், அதற்குள் இருந்த ரூபா 85 இலட்சம் பணத்தை களவாடி அங்கிருந்து தப்பியோடியதாக காரை செலுத்தி வந்தவர் அருகில் இருந்தவர்களிடமும் கூறியுள்ளதுடன் அக்கரைப்பற்று பொலிசில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமொன்றை நடாத்தும் நோக்கில் குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சந்தேக நபர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர், தான் வந்த காரை வீதி ஓரத்தில் நிறுத்தியுள்ளதோடு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரின் கண்ணாடியை கோடாரியால் உடைத்து காரினுள் இருந்தவரின் கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போல் குறித்த கொள்ளை நாடகம் எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணம் கொள்ளையடிக்கப்பட்டவுடன், காரிலிருந்த சந்தேகநபர், தனது பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, சம்பவம் நடந்த இடத்தில் நின்றவர்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவ்விடத்தில் நின்ற சிலர் கொள்ளையர்கள் சென்ற மோட்டார் சைக்கிளை துரத்தி சென்றுள்ளனர்.
தங்களை மோட்டார் சைக்கிளில் துரத்தி வருவதை கண்ட மோட்டார் சைக்கிளில் பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற இருவரும், அவர்களது மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தி சென்றபோது, அக்கரைப்பற்று சாகாமம் வீதி கோளாவில் வளைவில் உள்ள கம்பத்தில் அவர்களது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் மரணமடைந்ததுடன் பின்னால் இருந்து சென்றவர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக நாடகமாடிய காரில் வந்த நபர் பொலிஸில் முறைப்பாடு செய்ய சென்றுள்ளார். இதனையடுத்து காயமடைந்தவர் பொலிசிலில் சரணடைந்து குறித்த கொள்ளைச்சம்பவ நாடகத்தை கூறியுள்ளார். இதனையடுத்து நாடகமாடியதாக கூறப்படும் சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் காரைதீவு, வெட்டு வாய்க்கால் வீதியைச் சேர்ந்த சந்திரன் சங்கர்ராஜ் (26) எனவும், காயமடைந்தவர் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த வசந்தன் (30) எனவும் கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்றை சேர்ந்த 36 வயதுடைய நபர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
இலக்கத் தகடுகள் மாற்றப்பட்ட மோட்டார் சைக்கிளினையே குறித்த நபர்கள் இச்சம்பவத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.
இதன் அடிப்படையில் பணத்தை பறிகொடுத்ததாக பொலிசாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்த நபரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(அக்கரைப்பற்று மேற்கு நிருபர் - எஸ்.ரி. ஜமால்டீன், வாச்சிக்குடா விசேட நிருபர் - வி.சுகிர்தகுமார்)
Add new comment