தாய்லாந்தில் திருமண நிகழ்வொன்றில் மணமகன், மணமகள் உட்பட நால்வரை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வட கிழக்கு தாய்லாந்து மாகாணத்தின் கிராமம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை (25) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பாரா விளையாட்டுப் போட்டிகளில் தாய்லாந்து சார்பில் பங்கேற்ற 29 வயதான சட்டுரொங் என்பவரே தனது திருமண விழாவில் சூடு நடத்தியுள்ளார். திருமண விழாவின் பாதியில் வெளியேறி இருக்கும் மணமகன் பின்னர் துப்பாக்கியுடன் வந்து மணமகள், அவரது தாய் மற்றும் அவரது இளைய சகோதரியை சுட்டுக் கொன்றுள்ளார். தவறுதலாக பாய்ந்த மேலும் இரு துப்பாக்கி குண்டுகளில் ஒருவர் கொல்லப்பட்டு மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
திருமண நிகழ்வின்போது மணமகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையிலேயே மணமகன் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி இருப்பதாக ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த ஜோடி திருமணத்துக்கு முன் மூன்று ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டுரொங் கடந்த ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசியான் பரா விளையாட்டு போட்டியின் நீச்சல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இராணுவ வீரராக இருந்துள்ள அவர் எல்லையில் ரோந்துப் பணியின்போது கால்களை இழந்துள்ளார்.