Thursday, March 28, 2024
Home » ஐயப்பனின் அவதார மகிமை

ஐயப்பனின் அவதார மகிமை

by Rizwan Segu Mohideen
November 27, 2023 12:06 pm 0 comment

கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பந்தள தேசத்தின் மன்னனின் மகனாக ஐயப்பன் வளர்ந்த காரணத்தால் ஆரம்பத்தில் சபரிமலை யாத்திரை என்பதும், ஐயப்ப வழிபாடு என்பதும் கேரள மாநிலத்தவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு வழிபாட்டு முறையாக இருந்தது. அப்போதெல்லாம் மாதத்தின் கடைசி நாளில் நடைதிறக்கப்படும் போது 20 பேர் என்ற அளவிலும், மண்டல பூஜையின் போது அதிகபட்சமாக 1000 பேர் வரையிலும் மட்டுமே கலந்து கொண்டனர். ஐயப்பனின் திருமேனிக்கு அபிஷேகம் செய்து, பிரசாதமாக கொடுக்கப்படும் நெய், அடுத்த ஆண்டு சபரிமலை யாத்திரை செல்லும் வரை கூட அதே நறுமணம் மாறாமலும், கெட்டுப் போகாமலும் இருக்கும். இந்த நெய்யை ஒரு மண்டலம் மருந்தாக எடுத்துக் கொண்டால் தீராத நோய் அனைத்தும் தீரும் என்பது இப்போதும் நடக்கும் அதிசயம்.

கார்த்திகை முதல் நாளான இன்று ஐயப்ப பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து, விரதத்தை துவங்கி வருகின்றனர். இந்த சமயத்தில் சபரிமலை ஐயப்பன் பற்றியும், ஐயப்பன் வழிபாடு உலகம் முழுவதும் பரவியது எப்படி என்பது பற்றியும் பலரும் அறியாத 10 முக்கிய தகவல்களை இங்கே பார்ப்போம்.

  1. இருமுடி சுமந்த முதல் நபர் – பந்தள மன்னனுக்கு வளர்ப்பு மகனாக, மணிகண்டன் என்ற திருநாமத்துடன் வளர்ந்த சுவாமி ஐயப்பன், தனது தந்தையை பிரிந்து சபரிமலையில் தவம் செய்ய புறப்பட்டார். அப்போது அவரது தந்தையான பந்தள மன்னன், வன பகுதிக்கு செல்லும் மகனுக்கு பசிக்குமே என்பதற்காக உடனே சாப்பிட கூடிய வகையிலான உணவுகளை ஒரு பகுதியாகவும், நீண்ட நாட்கள் கெட்டு போகாத வகையிலான நெய்யினால் செய்யப்பட்ட உணவுகள் ஒரு பகுதியாகவும் வைத்து இரண்டு முடிகளாக கட்டி கொடுத்தனுப்பினார். இருமுடிகளை சுமந்து சபரிமலை யாத்திரை துவங்கிய முதல் நபர், சுவாமி ஐயப்பனே.
  2. வழிகாட்டும் கருடன் – ” எனக்கு வயதாகி விட்டது. நான் உன்னை காண வேண்டுமானால் வனத்திற்குள் எப்படியப்பா வருவது?” என பந்தள மன்னன் ஐயப்பனிடம் கேட்டார். அதற்கு சுவாமி ஐயப்பன், “நீங்கள் என்னை காண வரும் போது பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை கருடன் வழிகாட்டுவார்” என பதிலளித்தார். பந்தள மன்னர், ஐயப்பனை காண வரும் போதெல்லாம் ஐயப்பனின் ஆபரணங்களை எடுத்து வந்து, அவருக்கு அணிவித்து அழகு பார்ப்பதை வழக்கமாக கொண்டார். அவர் புறப்படும் போது கருடனும் வழிகாட்டினான். அன்று துவங்கி இன்று வரை, ஆண்டுக்கு ஒருமுறை மகரஜோதி நாளன்று, பந்தளத்தில் இருந்து ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி புறப்படும் சமயத்தில் கருடன் வந்து வழிகாட்டும்.
  3. வயதான பந்தள மன்னன் மலை ஏற சிரமப்பட்டு, ஐயோ…அப்பா என கூறிக் கொண்டே மலை ஏறி வந்ததால், நாளடைவில் அதுவே ஐயப்பா என்று ஆகி விட்டதாக சொல்லப்படுவது உண்டு.
  4. நீண்ட நாட்களானாலும் கெட்டு போகக் கூடாது என ஐயப்பனுக்காக பந்தள மன்னன் எடுத்துச் சென்ற அரவனை பாயசம், உன்னி அப்பம் போன்றவைகளே தற்போது வரை சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் ஆக கொடுக்கப்பட்டு வருகிறது.
  5. 60 ஆண்டுகளுக்கு முன் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை என்பவர் ‘ஸ்ரீ ஐயப்பன்’ என்ற தலைப்பில் ஐயப்பனின் வரலாற்றையும், வழிபாட்டு முறை பற்றியும் நாடகமாக போட்டு கேரளாவை தாண்டி பிற மாநிலத்தவர்களும் ஐயப்பன் பற்றி தெரிந்து கொள்ள செய்தார். அதற்கு பிறகு தான் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பலரும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள துவங்கினர்.
  6. ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT