நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயற்றிட்டங்களுக்கான பணியகமும் இணைந்து நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு துறையில் செயற்படுத்தக்கூடிய விசேட திட்டங்கள் தொடர்பாக வியூகங்களை அமைக்கும் ஆய்வுக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும் இ.தொ.கா. பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் நேற்று (23) இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட செயற்றிட்டங்களுக்கான பணியகத்தின் இலங்கை பணிப்பாளர் சார்ள்ஸ் கலந்துகொண்டார்.
அத்துடன் அமைச்சின் செயலாளர் வருண சமரதிவாகர, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத் தலைவர் பாரத் அருள்சாமி, அமைச்சு அதிகாரிகள், ஐ.நா. விசேட செயற்றிட்டங்களுக்கான பணியக அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்குவதற்கான ஏற்பாடு மற்றும் பெருந்தோட்டத்துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதற்காக சர்வதேச நாடுகள், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஐ. நா. விசேட செயற்றிட்டங்களுக்கான பணியகம் உள்ளிட்டவற்றிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு, உதவித் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், பெருந்தோட்டத்துறையிலுள்ள குடிநீர் உற்பத்தியாகும் இடங்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டம், மக்களுக்கு தடையின்றி சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாகவும் கருத்தாடல் நடைபெற்றது.