சம்பந்தப்பட்ட மௌலவி மன்னிப்பு கோரியதாக அறிவிப்பு
மதங்கள் மற்றும் கலாசார விழுமியங்கள் நிந்திக்கப்படுவதை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபை கண்டித்துள்ளது. அத்துடன் இவ்விவகாரம் குறித்து இந்துகுருமாருடன் கலந்துரையாடி – இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, அத்தீர்மானம் தொடர்பாக இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நடைபெற்ற ஊடக மாநாட்டில் அதனை அறிவித்தனர்.
மேற்படி ஊடக சந்திப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா செயலாளர் அர்க்கம் மௌலவி, உதவிச் செயலாளர் தாசீம் மௌலவி, இந்துக்குருமார் சார்பாக வைத்தியேஸ்வரக் குருக்கள், சிவராம் கிருஷ்ணக் குருக்கள், சிவஸ்ரீ தர்கா சர்மா குருக்கள் ஆகியோரும் கருத்துக்கள் தெரவித்தனர்.
“இவ்விடயத்தில் இரண்டு மதங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் நாம் ஒன்றுகூடி அதனை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்துள்ளோம். குறித்த விடயம் குறித்து நாம் உடன் செயல்பட்டதால், சம்பந்தப்பட்ட மௌலவி மன்னிப்புக் கேட்டு, அவர் தனது தவறை ஏற்றுக் கொண்டுள்ளார். இவ்விடயத்தில் நாங்கள் எழுதிய கடிதம் தொடர்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஆலோசனை நடத்தி ஐக்கியத்திற்கு வந்துள்ளது” என்று இந்துகுருமார் தெரிவித்தனர். இலங்கை ஜம்மியத்துல் உலமாக செயலாளர் அர்க்கம் மௌலவி கருத்துத் தெரிவிக்கையில்,
“கடந்த 2023.11.09. ஆம் திகதி முஸ்லிம் மதபோதகர் ஒருவரினால் பரத நாட்டியம் தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளியையும் பின்னர் அது தொடர்பில் தான் மன்னிப்பு கேட்பதாக வெளியிட்ட காணொளியையும சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்தது. குறித்த மதபோதகரினால் தெரிவிக்கப்பட்ட கருத்து நாட்டில் உள்ள இந்து மக்களின் மனதை புண்படுத்தியுள்ளதை அவதானிக்கின்றோம். இவ்வாறு மதம் மற்றும் கலாசார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்துக்குரியதுமாகும்” என்றார்.
அஷ்ரப் ஏ சமத்…