Friday, April 19, 2024
Home » பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க கடும் நடவடிக்கை அவசியம்

பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க கடும் நடவடிக்கை அவசியம்

by sachintha
November 23, 2023 8:48 am 0 comment

நீதி அமைச்சர் சபாநாயகரிடம் வலியுறுத்து

பாராளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடம் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்ற அமர்வுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தொலைபேசியில் உரையாடுவதற்கு முதலில் தடை விதிக்க வேண்டும் என்றும், அவர் சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலமும் குறைவடையும் என்பதை சுட்டிக் காட்டிய அமைச்சர்,பாராளுமன்ற நிலையியற் கட்டளையில் மாற்றங்களை ஏற்படுத்தியாவது கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தின் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சிறப்புரிமையும் மீறப்படுகின்றது.பாராளுமன்றம் உயரிய இடமாகவும் வெஸ்மினிஸ்டர் முறைமையைக் கொண்டது என்றும் நாம் குறிப்பிடுகின்றோம்.

ஆனால், தற்போது பாராளுமன்றத்தில் இத்தகைய கொள்கைகளுக்கு முரணான செயற்பாடுகள் மாத்திரமே இடம்பெறுகின்றன.

பாராளுமன்றத்தில் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதை விடுத்து,ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான மோதல்கள் சம்பந்தப்பட்டதாகவே காலையில் அதிகமாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெறுகின்றன.அதற்காக அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளால்தான், மக்கள் பாராளுமன்றத்தை வெறுத்து,விமர்சித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.இதற்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும்.

பாராளுமன்றத்தின் தற்போதைய இத்தகைய நிலைக்கு பிரதமர் உட்பட சபாநாயகரும் பொறுப்புக் கூற வேண்டும்.

பாராளுமன்ற விவாதத்தை மக்கள் விரும்பி பார்த்த காலமும் உண்டு. ஆனால் இன்று அதிகமாக பாராளுமன்றம் தொடர்பான விமர்சனங்கள் மாத்திரமே முன்வைக்கப்படுகின்றன. பாராளுமன்றத்தை பார்வையிட வரும் மாணவர்கள் எதை கற்றுக்கொள்கிறார்கள் என்பதும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT