ஆசிரிய இடமாற்றத்தின் போது தொழிற்சங்க உறுப்பினர்கள் அல்லாத ஆசிரியர்கள் பாரிய அநீதியை எதிர்கொள்ள நேர்வதாக, ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஆசிரிய இடமாற்றம் தொடர்பில், எதிர்க்கட்சி எம்பி க்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் சபையில் மேலும் தெரிவித்த அவர்,
ஆசிரிய இடமாற்ற சபைகளில் ஆசிரியர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் ஆசிரிய இடமாற்ற சபைகளில் தலையீடு செய்து தங்கள் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிக்கின்றனர். அந்த வகையில் தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக அல்லாதவர்களுக்கு இதன் போது அநீதி இழைக்கப்படுகின்றது.
ஆசிரியர் இடமாற்றப்பட்டியலை ஆசிரிய இடமாற்றல் சபைகள் கூடி உருவாக்கினால், அது தவறானது. இவ்வாறு பல கல்வி வலயங்களில் இடம்பெற்று வருகின்றன . இது தொடர்பாக பணிகளுக்கு ஒழுங்குமுறை வகுத்து, சுற்றறிக்கை தயாரிக்கப்படல் அவசியம்.இவை மாகாணசபைகளுக்கு அனுப்பப்படுவது சிறந்தது. இந்த வகையில் மாகாண மட்டத்தில் புதிய பணி ஒழுங்குமுறையும் சுற்றறிக்கையும் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்