GCE O/L பரீட்சை 10 ஆம் தரத்தில் நடத்தவும் திட்டம்
பதினோராம் தரத்தில் தற்போது நடத்தப்படும் கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையை,இனிவரும் காலங்களில் 10ஆம் தரத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வி கற்பதற்கான வயதைக் கருத்திற்கொண்டு, 15 வயதாகும்போது கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு சாதாரண தர பரீட்சையை எழுதும்போது மாணவர்கள் தமது 17 வயதில், கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, நான்கு வயதை நிறைவு செய்யும் சகல சிறார்களும் ஆரம்பக் கல்விக்காக பாடசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அது சம்பந்தமான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில், மொஹமட் முஸம்மில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே கல்வி யமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் சபையில் மேலும் தெரிவிக்கையில்,
இலவச ஆரம்பக் கல்வியைத் தொடங்குவதற்கு நாம் உத்தேசித்துள்ளோம். அந்த வகையில் நான்கு வயதை நிறைவு செய்யும் சிறார்கள் கண்டிப்பாக பாடசாலை செல்வது அவசியம். நாட்டில், இருநூறு மாணவர்களுக்கு குறைவான மாணவர்களைக் கொண்ட நான்காயிரம் பாடசாலைகள் உள்ளன.
லோரன்ஸ் செல்வநாயகம்