தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (சாஃப்) 20 வயதுக்கு உட்பட்ட ஆடவர் கால்பந்து தொடர் இலங்கை நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரை ஓகஸ்ட் மாதத்தில் சுகததாச அரங்கு அல்லது கொழும்பு குதிரைப்பந்தயத் திடல் அரங்கில் நடத்த இலங்கை கால்பந்து சம்மேளம் திட்டமிட்டுள்ளது. இலங்கை கால்பந்து சம்மேளன நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு போட்டியை நடத்துவதற்கான கோரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல் சவூதி அரேபியாவில் எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள பிஃபா கழக உலகக் கிண்ண கால்பந்து தொடரில் சாஃப் நிர்வாகத்தால் எடுக்கப்படவிருப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் உமர் ஜஸ்வான் தெரிவித்துள்ளார்.
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு, பாகிஸ்தான், பூட்டான் நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்க விருப்பத்தை வெளியிட்டுள்ளன. இந்தத் தொடருக்கான வீரர்கள் தேர்வுக்கு எதிர்வரும் ஜனவரியில் வீரர்களின் திறமையை அடையாளம் காணும் வகையில் லீக் போட்டிகளை நடத்தவும் இலங்கை கால்பந்து சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.