Thursday, April 18, 2024
Home » உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்; ஜனாதிபதி

உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்; ஜனாதிபதி

by Prashahini
November 22, 2023 3:28 pm 0 comment

இந்து சமுத்திரம் எந்தவொரு உலக பலவான்களின் தனிப்பட்ட ஆதிக்கத்துக்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான பொருளாதார, அரசியல் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உள்ளிட்ட சாத்தியமான கொள்கை அடிப்படையில் விரிவான மூலோபாயத் திட்டமொன்று அவசியனெ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

அதனால், உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இரத்மலான ஈகல் லேக் சைட் வளாகத்தில் நேற்று (21) நடைபெற்ற இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் இரண்டாவது பாடநெறிக்கான பட்டமளிப்பு நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு, தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் இரண்டாம் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த முப்படையினர் மற்றும் இலங்கை பொலிஸின் 36 சிரேஷ்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பட்டம் வழங்கினார்.

அதனையடுத்து தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் நூலின் முதற் பிரதி ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டதோடு, தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டீ.ஜீ.எஸ்.செனரத் யாபாவினால் ஜனாதிபதிக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

பாதுகாப்பு துறைக்குள் பரந்து காணப்படும் விடயப்பரப்புக்களை அறிந்துகொண்டு பொது மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அவசியமான குறுகிய கால பாடநெறிகளை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து தேசிய பாதுகாப்புக்கான மூலோபாய திட்டமிடல் ஒன்றை தயாரிக்க வேணடுமெனவும் வலியுறுத்தினார்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் அட்மிரல் எட்வின் தோமஸ் லயிடனின் இல்லமாக காணப்பட்ட தற்போதைய தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவன கட்டிடம் 1942 இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமான காலத்தில் இந்து சமுத்திரம் தொடர்பிலான மூலோபாய தீர்மானங்களை மேற்கொள்வதற்கான மையமாக விளங்கிமையைும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். அவ்வாறு இங்கிருந்து மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் இந்து சமுத்திரத்தில் பிரித்தானியர் ஆட்சியை நடத்திச் செல்வதற்கான பிரதான காரணியாக விளங்கியதாகவும் தெரிவித்தார்.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், மறைந்த தலைவர்களான டீ.எஸ்.சேனநாயக்க, ஜோன் கொத்தலாவல, சிறிமாவோ பண்டாரநாயக்க போன்றவர்கள் இந்து சமுத்திர வலயத்தை செல்வந்த நாடுகளின் மோதல்களிலிருந்து பாதுகாப்பதை உறுதிப்படுத்த முன்வந்தனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அந்த தெரிவுகளை பிற்காலத்தில் பெண்டூன்க் மாநாட்டிலும் ஜகார்த்தா பிரகடனத்திலும் ஏற்றுகொள்ளப்பட்டு சுயாதீன கொள்கையுடன் சர்வதேச தொடர்புகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அர்பணிப்பை வெளிப்படுத்தியிருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய அரசியல் மாற்றங்களின் போது, ​​​​ஒருதலைபட்சமான உலகம் மிகவும் சிக்கலானதும் ஒருங்கிணைந்ததுமாக மாறும் என தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் ஆட்சியின் கீழ் ஐக்கிய அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளும் அண்மைக்கால மாற்றங்களும் அந்த நிலைமையை மேலும் கடினமானதாக மாற்றியிருப்பதாகவும் தெரிவித்தார்.

G7 மற்றும் நான்கு தரப்பு பாதுகாப்பு உரையாடல் (Quad) போன்ற கூட்டணிகளை உருவாதல், உலக ஒழுங்கில் சீனாவின் பாதை என்பவற்றை கருத்திற் கொண்டு மாறிவரும் நிலத் தோற்றத்தில் இலங்கை மூலோபாய ரீதியில் திறமையாக கையாள வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

உக்ரேன் யுத்தம், சீனாவின் கடற்படைப் பலம் மற்றும் இஸ்ரேலின் மோதல்கள் போன்றவற்றின் பின்னணியில் இலங்கையின் பொருளாதார தன்னிறைவைப் பேண வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ,ஜெனிவா போன்ற சம்பிரதாயபூர்வமாக கவனம் செலுத்தப்படும் துறைகளுக்கு அப்பால் செல்லக்கூடிய வெளிநாட்டுக் கொள்கையின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

உலகளாவிய தெற்கில் ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் ஒத்துழைப்பது இந்தச் சூழலில் முக்கியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டளவில் பசுமை ஹைட்ரஜன் துறையில் 10 பில்லியன் டொலர் முதலீட்டை ஈர்ப்பது என்ற இலக்கு குறித்த கலந்துரையாடலில் தான் கலந்துகொண்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு வலுவான பொருளாதாரம் தேவை என்றும் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் மற்றும் வர்த்தகம் போன்ற சர்வதேச பிரச்சினைகளுக்கு G77 கட்டமைப்பிற்குள் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் மாநாடு மற்றும் G77 உச்சிமாநாடு என்பவற்றில் அந்த இலக்குகளை மீள மறுவரையறை செய்வதற்கும் உலகளாவிய சமாதானத்திற்கு ஒத்துழைப்பதற்கும் உலகளாவிய தெற்கிற்கு ஒரு முக்கியமான தளத்தை வழங்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

எதிர்காலத்தை கருத்திற் கொண்டு தயாரிக்கப்படும் இலங்கையின் புதிய வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு மீளாய்வு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, பாதுகாப்பு, பொருளாதாரம், போன்ற இதுவரை கவனத்தில் கொள்ளப்படாத துறைகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அடிக்கடி மாற்றத்திற்குள்ளாகும் உலகளாவிய நிலத்தோற்றத்தில் இலங்கை தனது பாதையை அடையாளப்படுத்துவதால், பரந்த பின்னடைவு மற்றும் முன்னோக்கு பார்வையுடன் தேசிய மூலோபாயத்தை தயாரிப்பது முக்கியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வேந்தர் ரியர் அட்மிரல் தம்மிக்க குமார, வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட அதிதிகள் மற்றும் முப்படை, பொலிஸ் உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT