36 வயது மூன்று பிள்ளைகளின் தந்தை பலி; 49 வயது நபர் கைது
அலுத்கம, தர்கா நகர் பகுதியில் இரு நபர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் சண்டையில் ஆரம்பித்து, மரணத்தில் முடிவடைந்துள்ளது.
தர்கா நகர், பத்தாஹ் ஹாஜியார் வீதியிலுள்ள வீடொன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (20) இரவு 10.30 மணியளவில் குறித்த பகுதியிலுள்ள உறவினர்கள் இருவருக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் முச்சக்கர வண்டி சாரதியான குத்தூஸ் மொஹமட் பஸான் எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 36 வயது நபர் பலியாகியுள்ளதோடு, அவரது உறவினரான 49 வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட குறித்த சந்தேகநபர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளதாக அலுத்கம பொலிசார் தெரிவித்தனர்.
தேங்காய் பறித்த விடயம் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே, இவ்வாறு கொலையில் முடிவடைந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
சந்தேகநபர், இன்றைய தினம் (21) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தர்கா நகர் பொலிசார் தெரிவித்தனர்.
Add new comment