‘கடல்சார் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அமைப்புக்களின் முதன்மையினைப் புரிந்து கொள்வதும், உலகின் மீன் வளத்தை எதிர்கால சந்ததிக்குமாய் உறுதி செய்வதும்’ எனும் தொனிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாடு செய்த சர்வதேச மீனவர் தின நிகழ்வு இன்று (21) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர் விஸ்வலிங்கம் கலிஸ்ரன் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், குறிப்பாக மீனவ பெண்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் குறூப் நிருபர் – எஸ்.றொசேரியன் லெம்பேட்