Thursday, April 25, 2024
Home » ஒரு காலத்தில் தானிய ஏற்றுமதியாளரானதை போல வலுசக்தி ஏற்றுமதியாளராக மாற வேண்டும்

ஒரு காலத்தில் தானிய ஏற்றுமதியாளரானதை போல வலுசக்தி ஏற்றுமதியாளராக மாற வேண்டும்

- 2023 இலங்கை பசுமை ஐதரசன் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
November 21, 2023 5:19 pm 0 comment

– இலங்கையின் தேசிய ஐதரசன் வரைவு ஜனாதிபதியிடம் கையளிப்பு
– வலுசக்தி வேலைத்திட்டம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள வலுசக்தி மாற்றத்துக்கான சட்டம் மற்றும் பல் நிபுணத்துவ குழு

காலநிலை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் போதும், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் போதும் பசுமை வலுசக்தியை அதிகளவில் பயன்படுத்திக்கொள்வதே இலங்கையின் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

வலுசக்தி திட்டங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது, பொருளாதார காரணிகள், விலை மற்றும் நீண்ட கால தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆழமான தெரிவுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்தத் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது வலுசக்தி மாற்றத்துக்கான சட்டம் மற்றும் பல் நிபுணத்துவக் குழு என்பவற்றை உருவாக்க வேண்டும் என பரிந்துரைத்தார்.

கொழும்பு ஷங்ரி லா ஹோட்டலில் இன்று (21) ஆரம்பமான இலங்கை பசுமை ஐதரசன் மாநாடு – 2023 இல் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கைப் பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனமான USAID உதவியுடன் “கிரீன்ஸ்டேட்” பசுமை வலுசக்தி நிறுவனத்துடன் இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த மாநாட்டில் மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் இலங்கை தேசிய ஹைட்டஜன் வழிகாட்டல் வரைவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கைப் பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) மற்றும் “கிரீன்ஸ்டேட்” ஐதரசன் இந்திய நிறுவனம் ஆகிவற்றுக்கு இடையில் ஒத்துழைப்பு அடிப்படையிலான முயற்சியாக அமைவதோடு, ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனமான USAID இன் உதவியுடன் இலங்கையின் வலுசக்தி மாற்றத்துக்கான பாதையை உருவாக்கும் நோக்கில் மேற்படி வழிகாட்டல் வரைவு முன்மொழியப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் தீர்வுகளுக்கான அறிக்கையில் அபிவிருத்தி அடைந்த நாடுகள் அளித்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளமைக்கு கவலை தெரிவித்த ஜனாதிபதி, இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக வெப்பநிலை 3 செல்சியஸால் உயர்வடையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.

2030 ஆம் ஆண்டளவில் 1.5 செல்சியஸினால் உலக வெப்பநிலையை மட்டுப்படுத்தவதற்குத் தேவையான இலக்குகளுடன், காலநிலை அனர்த்தங்களுக்கான உடனடித் தீர்வுகளைச் செயற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஐ.நா காலநிலை மாற்றங்களுக்கான COP – 28 மாநாட்டில் 2030 ஆம் ஆண்டளவில் வெப்பநிலையை உயர்வை 1.5 செல்சியஸினால் மட்டுப்படுத்துவதற்கான இலங்கையின் குறிப்பிடத்தக்க அர்பணிப்பை வெளிப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.பெருமளவில் கைத்தொழில்மயமான நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுற்றாடல் மாசடைதல் குறைந்த அளவில் காணப்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் மேற்படி விடயத்திற்காக முன்வந்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2030 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி கொள்ளளவினை மூன்று மடங்கினால் அதிகரித்துக்கொள்ளுமாறு ஐ.நா பொதுச் செயலாளர் முன்வைத்துள்ள கோரிக்கையினையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுகூர்ந்ததோடு, இலங்கையை பசுமை வலுசக்தி ஏற்றுமதியாளாராக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இலங்கையின் உலர் வலயங்களுக்குள் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், கடந்த காலத்தில் தானிய ஏற்றுமதியில் முன்னணியில் இருந்ததை போன்றே இலங்கை எதிர்காலத்தில் வலுசக்தி ஏற்றுமதியாளராகவும் மாற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கையை வலுசக்தி மையமாகவும் பசுமை ஐதரசன் விநியோக வலயத்தின் கேந்திர நிலையமாக மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேபோல் நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நிலையானதும் நீண்டகால பலன்களை தரக்கூடிய வலுசக்தி திட்டங்கள் தொடர்பில் முழுமையான மீளாய்வொன்றை செய்ய வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்தினார்.

அப்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு ஜப்பானின் உதவியுடன் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வேலைத்திட்டத்தினை ஆரம்பிப்பதற்காகவே தான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் நுரைச்சோலை அனல்மின் நிலைய திட்டத்தை இரத்துச் செய்ததாகவும் அதனால் கடுமையான எதிர்ப்புக்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், நுரைச்சோலை அனல்மின் நிலையம் தற்பொழுது நாட்டுக்கு சவாலாக மாறியுள்ளதாகவும், இந்த அனல்மின் நிலையம் தொடர்பான தற்போதைய நிலைமை, அதன் எதிர்கால பயன்கள் மற்றும் எதிர்காலப் பங்கு என்பன குறித்து மீள் மதிப்பீடு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காற்றாலை போன்ற நிலையான வலுசக்தி மூலங்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்திய ஜனாதிபதி, ஆற்றல் முகாமைத்துவத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தினார். அதற்கமைவாக, நீண்ட கால வலுசக்தி உற்பத்தித் திட்டம் தொடர்பில் விரிவான தொலைநோக்குப் பார்வை மற்றும் மீள் மதிப்பீட்டின் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

பசுமை வலுசக்திக்கான இலங்கையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க், இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரும் உரையாற்றியதுடன், பசுமை ஹைட்ரஜனை மாற்றுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மற்றும் அதற்கான நடவடிக்கைகளைப் பாராட்டினர்.

இந்த நோக்கத்தை எட்டுவதற்கு இலங்கைக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் அறிவித்தனர்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுரத் ஓவிடிகம, அத்துடன் இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை (PDASL) மற்றும் USAID பிரதிநிதிகள், கீரீன்ஸ் டெட் பசுமை வலுசக்தி நிறுவனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT