கடும் மழை காரணமாக மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பதுளை – வெலிமடை வீதி, புஹுல்பொல மேல் வீதிப் பகுதியில் மீண்டும் மண்சரிவு மற்றும் கற்கள் விழுந்துள்ளமையினால் வீதியை சீரமைக்க முடியவில்லை.
அடை மழையினால் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் வீதிகள் மற்றும் விவசாயம் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பதுளை – கந்தேகெதர மற்றும் பதுளை – வெலிமடை வீதியில் புஹுல்பொல வீதியின் மேல் பகுதியில் பாரிய மண்மேடுகளும், கற்களும் விழுந்து வீதி தடைப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் இணைந்து இந்த வீதிகளை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், மாலை வேளையில் இப்பிரதேசங்களில் பெய்துவரும் அடை மழையினால் இந்த நடவடிக்கைகளுக்கு பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளது.
இந்த வீதிக்கு பதிலாக பதுளை மற்றும் வெலிமடை பிரதேசங்களில் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வெலிமடை – தம்பவின்ன ஊடாக பண்டாரவளை பதுளை வீதியையும், ஹாலிஎல – அடம்பிட்டிய ஊடாக பண்டாரவளை – வெலிமட வீதியையும் மாற்று வீதியாக பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஹாலிஎல விசேட நிருபர்