பொத்துவில் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக நிலவி வந்த போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு வழங்கிய போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டு முதல் அக்கரைப்பற்று டிப்போவின் கீழ் உப டிப்போவாக இயங்கி வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பொத்துவில் டிப்போவை, பிரதான டிப்போவாக தரம் உயர்த்தி நவீனப்படுத்த அமைச்சர் பந்துல குணவர்த்தன எடுத்த முயற்சிக்கே அப்பகுதி மக்கள் நேரடியாக நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சருடன் மக்கள் கலந்துரையாடி நன்றிகளை தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர் முசஷாரபின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் இவ்வுஉதவியை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணத்தில் மேலும் பல உப டிப்போக்கள் இன்னமும் கீழ் நிலையில் உள்ளதாகவும் அவற்றையும் அமைச்சர் பந்துல குணவர்தன புனரமைத்து, மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும் இதன்போது, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இங்கு பேசிய அமைச்சர்:
நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் நீண்டகாலமாக முடங்கிக் கிடக்கும் நிலையில், பொத்துவில் டிப்போ தரமுயர்த்தப்பட் டமை,கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டத்தின் புதிய ஆரம்பமாகும். பொத்துவில் மற்றும் லௌகல பகுதிகளை உள்ளடக்கி டிப்போ அத்தியட்சகர் ஒருவரின் கீழ் போக்குவரத்து சேவையை மிகவும் திறம்படவும் வினைத்திறனுடனும் மேற்கொள்ள முடியும். இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையை டிசம்பர் 31இல், நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில், இதனை முற்றாக நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் மட்டுமன்றி உலக முழுவதும் பிரசித்திபெற்ற இடம் அறுகம்பே. அறுகம்பேயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரையிலான பயணம் மிகவும் விலை உயர்ந்தது. தனியார் வாகனத்தை பயன்படுத்தினால் 50,000 ரூபாவுக்கு மேல் செலவாகும். நாளை முதல் 2900 ரூபாவிற்கு சொகுசு பஸ்வணடியில் அறுகம்பேயிலிருந்து விமான நிலையத்திற்கு செல்வதற்கான புதிய பஸ் சேவையை ஆரம்பிக்கவுள்ளோம். அரசாங்க திட்டங்களை விமர்சித்தும், நிராகரித்தும் வருபவர், ஒருவேளை ஆட்சியைப் பிடித்தாலும் இரண்டு வாரங்களுக்கே அதில் நிலைப்பார். கிரிக்கெட் நெருக்கடியைப் பார்ப்பது போன்று கூட தற்போதைய நெருக்கடியை பொருட்படுத்தவில்லை. அரசாங்க அதிகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலுள்ளவர்,இந்த கடனை எப்படி செலுத்துவது என்பதை நாட்டுக்கு விளக்க வேண்டும் என்றார்.