2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இன்றைய வாக்கெடுப்பின்போது எதிர்க்ட்சிகள் எதிர்த்து வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதுடன் ஆளும் கட்சியின் சில உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை கடந்த 13 ஆம் திகதி நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். அதனையடுத்து வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 7 நாட்களாக இடம்பெற்ற நிலையில், அதன் மீதான வாக்கெடுப்பே இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. இந்த வாக்கெடுப்பின்போது 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஜே .வி.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியன தீர்மானித்துள்ளன. தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரான நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டார் என அவரது கட்சி வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பும் அதன் முன்னாள் பங்காளிக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ மற்றும் தமிழ் மக்கள் விடுதலைக்கழகமான புளொட் ஆகியவை இன்று காலையே வாக்கெடுப்பை எதிர்ப்பதா அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்காது விடுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி தரப்பில் சுயாதீன தரப்பினராக செயற்படும் எம்.பி.க்களில் சிலர் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்