Wednesday, April 24, 2024
Home » இயற்கை அனர்த்தங்களை அலட்சியப்படுத்தலாகாது!

இயற்கை அனர்த்தங்களை அலட்சியப்படுத்தலாகாது!

by damith
November 21, 2023 6:00 am 0 comment

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் தற்போது மழை பெய்து வருகின்றது. ஒருசில பிரதேசங்கள் தவிர அதிகளவான பிரதேசங்களில் மாலை வேளையில் தொடர்ச்சியாகப் பெய்துவருகின்ற தொடர்ச்சியான மழை காரணமாக பல இடங்களில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகின்றது. வீடுகள், வீதிகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன. விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான மழை காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்ற பிரதேசம் மலையகம் ஆகும். மண்சரிவுகள் பல இடங்களில் ஏற்பட்டுள்ளன. மக்கள் பலர் மண்சரிவு காரணமாக தங்களது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துமுள்ளனர்.

இலங்கையில் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகலில் தொடங்கி மழை அல்லது இடியுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடிய அபாயமும் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும். இன்றைய சீரற்ற காலநிலையை மக்கள் அலட்சியப்படுத்துதல் கூடாது. அவ்வாறு அலட்சியம் செய்வார்களானால் அனர்த்தங்களில் அகப்பட்டுக் கொள்ள வேண்டிய ஆபத்து ஏற்படலாம். பிரதானமாக வெள்ளம், இடிமின்னல், காற்று போன்ற இயற்கை அனர்த்தங்கள் விடயத்தில் மிகுந்த அவதானத்துடன் மக்கள் நடந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடந்த சில வாரங்களாக இடிமின்னல் தாக்கத்தின் காரணமாக மக்கள் ஒருசிலர் பரிதாபமாக மரணமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள ஆறுகளில் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால், ஆறுகளுக்கு அண்மித்த தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். மழை தொடர்ந்து பெய்வதனால் ஆறுகள் எந்நேரத்திலும் திடீரென்று பெருக்ெகடுக்கும் ஆபத்து எதிர்நோக்கப்படுகின்றது.

ஆறுகள் மற்றும் குளங்களுக்கு நீராடச் செல்லுதல், படகுகளில் பொழுதுபோக்குக்காகச் செல்லுதல் போன்றன உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியவையென்பதை மறந்து விடலாகாது.

ஆறுகள் மோசமாகப் பெருக்ெகடுக்குமானால் அதன் அயலில் வாழ்கின்ற மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவதே பாதுகாப்பானதாகும். மக்கள் ஒவ்வொருவரும் தங்களது உயிர்ப்பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எச்சரிக்ைக அறிகுறிகள் விடயத்தில் அலட்சியம் காட்டுதல் புத்திசாலித்தனமானதல்ல.

அதேசமயம் மண்சரிவு குறித்த ஆபத்தும் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் நிலவுகின்ற பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் எச்சரிக்ைக அறிகுறிகளை அவதானமாக செவிமடுத்து அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். மலையகத்தின் சில பிரதேசங்கள் தொடர்ச்சியான மழையின் ​போது மண்சரிவு அபாயம் நிறைந்த பிரதேசங்களாக மாறி விடுகின்றன.

மின்னல் தாக்கமும் சாதாரணமானதல்ல. இலங்கையில் மின்னல் தாக்கத்தினால் வருடாந்தம் மக்கள் பலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். மிகக்குறுகிய நேரத்தில் ஏற்படும் மின்னல் தாக்க பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகும். எனவே மின்னல் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு நம்மத்தியில் அவசியமாகும். அந்தவகையில் அனர்த்தத்திற்கு முன்னரான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அனர்த்த வேளையின் போதான நடவடிக்கைகளையும நாம் முறையாகக் கடைப்பிடிக்கின்றபோது ஆபத்துகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

இடிமின்னல் வேளைகளில் நாம் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். வானிலை அவதான நிலையத்தால் வெளியிடப்படும் வானிலை எதிர்வுகூறல்களை செவிமடுத்து அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்படும்போது இந்நாட்களில் நாம் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும்.

இடிமின்னல் வேளைகளில் திறந்தவெளிகளில் நிற்பதையோ அல்லது விளையாடுவதையோ அல்லது வயல்களில் வேலை செய்து கொண்டிருப்பதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அந்தப் பரந்தவெளியில் உயர்ந்த பொருளாக நீங்களே இருக்கும்போது நேரடியாக மின்னல் உங்களைத் தாக்கலாம்.

சந்தர்ப்பவசத்தால் வெட்டவெளியில் இருக்க நேர்ந்தால் மின்னலின்போது தரையில் படுத்துவிடாதீர்கள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பினை இயலுமானளவில் குறைத்துக் கொள்ளக்கூடிய வகையில் அமருங்கள். இதனால் ஓரளவேனும் மின்னல் தாக்கத்தின் பாதிப்பை குறைக்கலாம்.

இயற்கை அனர்த்தமானது அலட்சியத்துக்குரியதன்று. அவை எமது உயிருக்ேக ஆபத்தை ஏற்படுத்தி விடக்கூடும். ஆகவே முன்னெச்சரிக்ைகயை பேணுவதே பாதுகாப்பானதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT