மட்டக்களப்பு சிலோன் நேர்சிங் கல்லூரியில் தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த தாதிய உதவியாளர்களுக்கான தொப்பி அணிவித்து பட்டமளிக்கும் நிகழ்வு (19) மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தனியார் விடுதி மண்டபத்தில் இடம்பெற்றது.
மலர் மாலைகள் அணிவித்து அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் ஒருநிமிட இறை வணக்கத்தோடு தேசியக் கீதம் இசைக்கப்பட்டு அதிதிகளினால் மங்கள விளக்கேற்றி நிகழ்வு ஆரம்பமானது.
சிலோன் நேர்சிங் கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெ. மியூறியா டிலாணியின் தலைமையில் ஆரம்பமாகிய நிகழ்வில், கலாச்சார நடனம் இடம்பெற்றதுடன் சிலோன் நேசிங் கல்லூரியில் ஒரு வருட கால தாதிய உதவியாளர் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்த 100 தாதிய உதவியாளர்களுக்கு தொப்பி அணிவித்து பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இதன்போது பதக்கம் அணிவிக்கப்பட்டு, நினைவுச் சின்னமும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது பிரதம அதிதி உள்ளிட்ட ஏனைய அதிதிகள் அனைவரும் கல்லூரி நிருவாகத்தினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்