இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல் ஒன்றை கடத்தி இருக்கும் யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் அதில் இருந்த பணியாளர்களை பணயக்கைதிகளாக பிடித்துள்ளனர்.
காசா மீதான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வரும் வரை சர்வதேச கடலில் உள்ள இஸ்ரேலுக்கு தொடர்புடைய அல்லது இஸ்ரேலுக்கு சொந்தமாக கப்பல்கள் இலக்கு வைக்கப்படும் என்று ஈரான் ஆதரவுடைய அந்தக் கிளர்ச்சிக் குழு எச்சரித்துள்ளது.
இஸ்ரேலிய செல்வந்தர் ஒருவருடன் தொடர்புடைய பஹாமாஸ் கொடியுடனான கப்பல் ஒன்றே கடத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 ஊழியர்கள் இருந்துள்ளனர். இவர்கள் இஸ்லாமிய பெறுமானங்களுக்கு அமைய நடத்தப்படுவதாக ஹூத்திக்கள் கூறியபோதும் அது என்ன என்பதை விளக்கவில்லை.
துருக்கியிலிருந்து இந்தியா சென்றுகொண்டிருந்தபோது செங்கடலில் வைத்து இந்தக் கப்பல் கடத்தப்பட்டுள்ளது. கப்பல் கடத்தப்பட்டது “ஈரானின் பயங்கரவாதச் செயல்” என்று இஸ்ரேல் கண்டனம் தெரிவித்தது.
ஏற்கனவே ஹூத்திக்கள் இஸ்ரேலை இலக்கு வைத்து பல முறை ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.