தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இராகலை மத்திய பிரிவு தோட்ட தொழிலாளர்கள் தமக்கான வீட்டு உரிமையை கேட்டு இராகலை நகரில் அமைதியான முறையில் போராட்டத்தில் நேற்று காலை ஈடுபட்டனர்.
இராகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கடந்த யூலை மாதமளவில் இடம்பெற்ற தொடர் குடியிருப்பு விபத்தில் 18 வீடுகள் தீயில் முற்றாக எரிந்து நாசமாகின.
இதனால் இதில் வசித்து வந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் நிர்க்கதியானதுடன் இவர்கள் தற்காலிகமாக தோட்ட வைத்தியசாலை கட்டடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்து கொடுப்பது தொடர்பில் எத்தகைய முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் தோட்ட நிர்வாகம் மற்றும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட லயன் குடியிருப்புகளை புனரமைத்து அதில் மீள் குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் மக்கள் இதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன் பாதுகாப்பான இடத்தில் தனிவீடுகளை அமைத்து அதில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதற்கான அழுத்தத்தை கொடுக்கும் வகையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு இராகலை நகரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைதி போராட்டத்தில் மத குருக்கள், மக்கள் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
(ஆ.ரமேஷ்)