ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து காங்கேசன்துறை – – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவிருப்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட IndSri Ferry Services Pvt Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் சேவையை மேற்கொள்ள பூர்வாங்க அனுமதிகள் இலங்கை, – இந்தியா அரசாங்கங்களிடமிருந்தும் கிடைத்து விட்டன. இதற்காக இந்திய கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ‘சிவகங்கை’ என்ற கப்பலை தமது நிறுவனம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்துக்கு வந்து சேருமென நந்தகோபன் தெரிவித்துள்ளார்.
கப்பலில் 150 பயணிகள் தலா 60 கிலோ பொதிகளுடன் (check in baggage) பயணிக்கலாம். ஒரு வழிப் பயணக் கட்டணமாக இந்திய ரூபாவில் 4,250 மற்றும் வரியும் அறவிடப்படும். இலங்கை ரூபாவில் 17,000 மற்றும் வரிகள் அறவிட உத்தேசிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் பிரதான விற்பனை முகவர்களான ‘மெற்றோ வொயேஜஸ்’ மூலமாகவோ அல்லது அவர்களின் துணை முகவர்களினூடகவோ, விரைவில் வெளியிடப்பட இருக்கும் android & IOS app மூலமாகவோ கப்பல் பயணத்துக்கான பதிவுகளை மேற்கொள்ளமுடியுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.