Tuesday, March 19, 2024
Home » மாணவர் விஞ்ஞான பாடத்தை விருப்பத்துடன் கற்கும் நிலையை ஏற்படுத்தியவர் ஆசிரிய ஆலோசகர் நிலூபர்

மாணவர் விஞ்ஞான பாடத்தை விருப்பத்துடன் கற்கும் நிலையை ஏற்படுத்தியவர் ஆசிரிய ஆலோசகர் நிலூபர்

by damith
November 20, 2023 11:40 am 0 comment

யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ஏ.ஜே.நிலூபர் அவர்களுக்கான அல்-குர்ஆன் தமாம் மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகள் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றன.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் (நழீமி) தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளை கல்விசார் உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் அக்கரைப்பற்று அபுபக்ர் சித்தீக் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் அல்-குர்ஆன் தமாம் நிகழ்வில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் எம்.எம்.கலாமுல்லாஹ் (ரஷாதி) அன்னாருக்கான பிரார்த்தனையை நிகழ்த்தினார்.

நிகழ்வில் நினைவுரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ், “அக்கரைப்பற்று கல்வி வலய மாணவர்கள் விஞ்ஞான பாடத்தை விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் கற்கும் நிலையை ஏற்படுத்தியவர் நிலூபர். அவரது பணி வினைத்திறனாக அமைந்திருந்தது. க.பொ.த (சா.தர) பரீட்சை, விஞ்ஞானபாட பெறுபேற்றில் அக்கரைப்பற்று கல்வி வலயம் தேசிய ரீதியில் முன்னணி வகிப்பதற்கு விஞ்ஞான பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.அப்துல் வாஹித், மர்ஹூம் நிலூபர் ஆகியோர் ஆற்றிய மகத்தான பணி பிரதான காரணம். அவர்கள் இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் பணியாற்றியதனால் எங்களுக்கு நிறைவான வெற்றி கிடைத்தது. ஆசிரிய ஆலோசகர் நிலூபர் அவர்களின் மரணம் கல்விக்கும், மாணவர்களுக்கும் பேரிழப்பாகும்” என்றார்.

அக்கரைப்பற்று அபுபக்ர் சித்தீக் இஸ்லாமியக் கல்லூரியின் அதிபர் அஷ்-ஷெய்க் எம்.எம்.கலாமுல்லாஹ் (ரஷாதி) கருத்து வெளியிடுகையில் “நல்லதொரு மனிதர், சிறந்த ஆசிரியர், உத்தமர், மிருதுவான மனம் படைத்தவர், பொறுமைசாலி, இங்கிதமானவர். எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர், யாருக்கும் தொந்தரவு இல்லாதவர் நிலூபர் ஆவார்” என்றார்.

இந்நிகழ்வில் பிரதி, உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள், கணக்காளர் கே.லிங்கேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.றிம்ஸான், மர்ஹூம் நிலூபர் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ஏ.ஜே.நிலூபர் தனது அட்டாளைச்சேனை கமநலப் பிரிவிலுள்ள, கணையாங்குழி கண்ட நெற்காணிக்கு அதிகாலை வேளையில் பயணித்துக் கொண்டிருந்த போது, யானைத் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த நிலையில்உயிரிழந்தார்.

முகம்மட் றிஸான் அட்டாளைச்சேனை மத்திய நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT