Friday, April 19, 2024
Home » கிரிக்கெட்டுக்கான தடைக்கு சூழலை ஏற்படுத்தியது கிரிக்கெட் சபையே

கிரிக்கெட்டுக்கான தடைக்கு சூழலை ஏற்படுத்தியது கிரிக்கெட் சபையே

ஆராய விசேட குழு அமைக்க வேண்டும்

by damith
November 20, 2023 8:53 am 0 comment

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்வதற்கான சூழலை ஏற்படுத்தியது இலங்கை கிரிக்கெட் சபையே என்றும் சர்வதேச கிரிகெட் சபைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் பொய் குற்றச்சாட்டுக்களே தடைக்கு வழி வகுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய விசேட குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்துக்களை முன் வைக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சியினர் கிரிக்கெட் தொடர்பாக முன் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இலங்கை கிரிக்கெட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை விதித்தது என ஆளும் கட்சியினர் குற்றம் சுமத்தி வந்தனர்.

தடை செய்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்தது இலங்கை கிரிக்கெட் சபையாகும்.

கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி பிரதான 5 குற்றச்சாட்டுக்களை தெரிவித்து, அரசாங்கம் கிரிக்கெட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த பொய் குற்றச்சாட்டுக்களே தடைக்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முதலாவது குற்றச்சாட்டு, கிரிக்கெட் போட்டிகளுக்காக விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் தலையீடு, இரண்டாவது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளின் சம்பள விபரத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கோருவது, மூன்றாவது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனுமதியின்றி இலங்கை பிரீமியர் லீக்கை நடத்த முடியுமாக இருப்பது, நான்காவது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான புதிய யாப்பு அமைப்பதாக கூறி விளையாட்டுத் துறை அமைச்சர் மேற்கொள்ளும் தலையீடு, ஐந்தாவது குற்றச்சாட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கணக்காய்வு அறிக்கை வரைபை வெளியிட்டதன் மூலம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு, மற்றும் மேலதிக குற்றச்சாட்டாக விளையாட்டுத்துறை அமைச்சர் தேசிய விளையாட்டு நிதியத்துக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து 20வீத நன்கொடை வழங்குமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் எந்த அடிப்படையுமற்றவை.

அதனால் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய விசேட குழுவொன்றை அமைக்க வேண்டும். அதில் ஆளும் எதிர்க்கட்சியிலுள்ள கிரிக்கெட் தொடர்பான ஆர்வம் உள்ளவர்களை உள்ளடக்க வேண்டும். மாறாக பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதால் இந்த விடயம் இழுத்தடிக்கப்பட்டு உண்மை மறைக்கப்படலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT