கண்டி மாவட்டத்தில் கடும் மழை காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அனர்த்த முகாமைத்துவ மத்தியள நிலையம் தகவல் தருகையில் இவ்வாறு குறிப்பிட்டது.
தெல்தெனிய, உடிஸ்பத்துவ போகாபிட்டிய நீரோடையில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் நீரில் வீழ்ந்துள்ளதாகவும், அவரை தேடும் பணியில் இறங்கலைப் பொலிசார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரினால் எடுத்துச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளை பிரதேச மக்கள கண்டெடுத்துள்ளனர்.
மற்றும் ஒரு சம்பவத்தில் கட்டுகஸ்தோட்டை, கஹல்ல பிரதேசத்தில் உள்ள இஹல கம்மெத்த என்ற இடத்தில் மண்மேட்டுடன் கற்பாறை ஒன்றும் சேர்ந்து வீடு ஒன்றின் மீது வீழ்ந்துள்ளது. இதனால் வீடு பலத்த சேத்திற்கு உள்ளாகியுள்ளது, உயிர்ச் சேதங்கள் இல்லை எனவும் கட்டுகஸ்தோட்டைப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கண்டி- ரட்டேமுல்ல பாதையில் ஏற்பட்டுள்ள ஒரு மண் சரிவு காரணமாக பாதையில் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கந்தேகம என்ற இடத்தில் இடம் பெற்றுள்ள இவ் மண்சரிவை அகற்றி, பாதையை சீராக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரம் வத்துகாமம் – கபரகல பாதையில் மண்மேடு சரிந்ததால் பன்வில முதல் கபறகல வரையான போக்கவரத்தும் முற்றாகப் பாதிக்கப்பட்டது.
அதனையும் சீர் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கண்டி – மாத்தளை பிரதான பாதையில் அக்குணை நகரத்தில் மாலைநேரங்களில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால் கண்டி- மாத்தளைப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்படுகின்றன. சாரதிகள் பாதிப்டைந்தநேரங்களில் மாற்று வழியைப் பயன் படுத்தி வருகின்றனர்.
(அக்குறணை குறூப் நிருபர்)