வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், உடுவில் பிரதேச செயலகமும், கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா-2023 நிகழ்வு வியாழக்கிழமை(16.11.2023) காலை-09.30 மணி முதல் உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உடுவில் பிரதேச செயலாளரும், கலாசாரப் பேரவைத் தலைவருமான த.முகுந்தன் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
விழாவில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும், வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி லாகினி நிருபராஷ் சிறப்பு விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நடனத்துறைத் தலைவர் செல்வி.மைதிலி அருளையா கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய அம்சமாக ‘ஞான ஏந்தல்’ விருது வழங்கல் இடம்பெற்றது. அந்தவகையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஊடகப் பணியாற்றி வரும் செல்வநாயகம் ரவிசாந் ஊடகத் துறைக்கான விருதினையும், நீண்ட காலமாக இலக்கிய எழுத்துப் பணிகளில் ஈடுபட்டு வரும் சபாபதி புஸ்பநாதன் இலக்கியத் துறைக்கான விருதினையும், நீண்ட காலமாக இசைத் துறையில் ஆர்வம் செலுத்தி வரும் திருமதி.மனோகரி சற்குருநாதன் இசைத்துறைக்கான விருதினையும், பல வருடங்களாக நாடகத் துறையில் ஈடுபட்டு வரும் மகேந்திரராசா ரவிசங்கர் நாடகத் துறைக்கான விருதினையும் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நால்வருக்குமான ஞான ஏந்தல் விருதினை மேடையில் வைத்து வழங்கிச் சிறப்பித்தார்.