யாழ்ப்பாணம் – மன்னார் பாதையூடாக பயணித்த தனியார் பஸ் ஒன்று, போட்டி போட்டு முழங்காவில் பஸ்ஸை முந்த முயற்சித்த நிலையில், கட்டுபாட்டை இழந்து இடம்பெற்ற விபத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் முழங்காவில் பிரதான வீதியில் இடம் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று (18) மதியம் 3.00 மணியளவில் புறப்பட்ட தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு முழங்காவில் முக்கொம்பன் பகுதியில் பயணித்து கொண்டிருந்த நிலையில் பின்னால் வந்த மற்றைய தனியார் பஸ் சாரதியின் செயற்பாட்டால் கட்டுபாட்டை இழந்துள்ளது.
பின்னால் வந்த சாரதி வேகமாக வாகனத்தை செலுத்தியதுடன் ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் வாகனத்தை செலுத்தி உள்ளார். இதன் காரணமாக பயணிகளுடன் மன்னார் நோக்கி வந்த தனியார் பேருந்து அருகில் உள்ள மரத்தில் மோதும் விதமாக சென்ற நிலையில் மரத்தை சூழ இருந்த மணல் திட்டு காரணமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டதுடன் பேருந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.
தொடர்ச்சியாக மன்னார் யாழ்ப்பாணம்,மன்னார் வவுனியா வீதிகளில் பேருந்து சாரதிகள் மக்களின் உயிர்களை மதிக்காது போட்டி போட்டு பேருந்துகளை செலுத்தும் சம்பவங்களும் அதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மன்னார் குறூப் நிருபர்