திறைசேரியுடன் நடந்த பேச்சில் கொள்கையளவில் தீர்மானம்
உள்ளூராட்சி சபை நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக திரைசேறியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில் தயாசிறி ஜயசேகர எம் .பி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். தயாசிறி ஜயசேகர எம் பி தமது கேள்வியில், கடந்த எட்டு வருடங்களாக மேற்படி சிற்றூழியர்கள் 13,000 பேர் கடமை புரிந்து வருகின்றனர். உள்ளூராட்சி சபைகள் மூலம் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டாலும் நிரந்தர நியமனம் இதுவரை வழங்கப்படவில்லை.இவர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுக் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர்,
இதற்கு முன்னரும் இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டு பதில் வழங்கப்பட்டுள்ளது. அவர்களை நிரந்தரமாக்குவதற்கு திரைசேறியுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான கொடுப்பனவை வழங்கக்கூடிய சில உள்ளூராட்சி சபைகள் இருந்த போதும், அத்தகைய சுமையை சுமக்க முடியாத சில உள்ளூராட்சி சபைகளும் காணப்படுகின்றன.
லோரன்ஸ் செல்வநாயகம்