கதிர்காமம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாக புத்தசாசன மத கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கரவுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதுபற்றித் தெரிவித்த அவர் மத வழிபாட்டு தலங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் முதற்கட்ட பணிகளை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்ய முடியும்.
கதிர்காமம் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் மின்சாரம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளோம். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட உதவித் திட்டத்தின் கீழ், மத வழிபாட்டு தலங்களில் சூரிய சக்தி அமைப்புகளை நிறுவும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.