10ஆவது பொதுநலவாய உள்ளூராட்சிமன்ற மாநாடு – 2023 நேற்று (14) ருவண்டா தலைநகர் கிகாலியில், ருவண்டா குடியரசின் பிரதமர் Ngirente Edouard தலைமையில், பல நாடுகளின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
”உள்ளூராட்சி நிறுவனங்களின் மீள் தன்மையைச் சிறந்த முறையில் உருவாக்குதல்” எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் கலந்துகொண்டுள்ளார்.
நவம்பர் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உலகளாவிய பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம் மற்றும் கோவிட்-19 தொற்று உள்ளிட்ட எதிர்மறையான சூழ்நிலைகளை உள்ளூராட்சி நிறுவனங்கள் எந்த வகையில் கையாள்வது, எதிர்காலத்தில் இவ்வாறான சூழ்நிலைகளுக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது குறித்துக் கலந்துரையாடப்படும்.
பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் குறித்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் Smart and Human City is making through the Public Participation in the City Finance எனும் தலைப்பின் கீழ் விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார். குறித்த மாநாட்டில் மேற்கொள்ளப்படும் பரிந்துரைகள் 2024 ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) முன்வைக்கப்படவுள்ளது.
செல்வராஜா – பதுளை தினகரன் விஷேட நிருபர்