வெளிநாடுகளிலிருந்து மீன் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்தப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.
உள்நாட்டில் குறைவாக அறுவடை செய்யப்படும் மீன்களே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதையும் நிறுத்துவது தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள் மற்றும் படையினர் என சில அரச நிறுவனங்களுக்கு வழங்குவதற்காகவே கடற்றொழில் கூட்டுத்தாபனம் உள்ளூரில் குறைந்த அறுவடையான மீன்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றது. வெளிநாடுகளிலிருந்து மீன் இறக்குமதி செய்வது எமது நிலைப்பாடல்ல.அந்த வகையில் அவ்வாறான இறக்குமதியை நிறுத்தி உள்ளூர் அறுவடை மீன்களை அந்நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் சுமித் உடுக்கும்புர எம்.பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சுமித் உடுகும்புர எம்பி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வெளிநாடுகளிலிருந்து மீன் இறக்குமதி செய்வது எமது நிலைப்பாடல்ல. எனினும், எமது நாட்டில் மிகக் குறைவாக அறுவடை செய்யப்படும் கொப்பரா மற்றும் தளபத் வகை மீன்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அதிக மீன்கள் தேவைப்படும் அரச நிறுவனங்களுக்கு இவை,கடற்றொழில் கூட்டுத் தாபனத்தால் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன.அவ்வாறான இறக்குமதியை நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றோம்.
லோரன்ஸ் செல்வநாயகம்