தரமற்ற ஒப்பந்த முறைமை மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்களை கறுப்பு பட்டியலிலிடுமாறு, சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சர்வதேச தரத்துக்கமைய கொள்முதல் முறையின் கீழ் முறையான தரத்தை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் கறுப்பு பட்டியல் இடப்படுமென்றும் இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் என்பதுடன் அவ்வாறான நிறுவனங்கள் இந்நாட்டில் காணப்படுமானால் அவை கறுப்பு பட்டியலிலிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மருந்து பொருட்களை கொள்வனவு செய்தல் என்பது மனித உயிருடன் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கலாகும். இதனால், இதற்காக வருடந்தோறும் மில்லியனளவில் பணம் செலவிடப்படுகின்றது. எனவே, அந்நிறுவனங்கள் மக்களுக்கு தரமான மருந்துபொருட்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன சுட்டிக்காட்டினார்.
சுகாதார அமைச்சின் மருந்து கட்டுப்பாடு, வழங்கள் விநியோகம் மற்றும் தொடர்பாடல் விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் வைத்திய வழங்கல் பிரிவு, அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், அரச மருந்தாக்கல் மற்றும் உற்பத்தி கூட்டுத்தாபனம், தேசிய ஔடத கட்டுப்பாட்டு அதிகார சபை போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நடந்த கலந்துரையாடலிலே அமைச்சர் நேற்று (14) இதனை சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னர் மருந்து பொருட்களின் விலை நிர்ணய குழு (pricing committee) மூலம் நிர்ணயம் செய்ய அமைச்சர் பணிப்புரை விடுத்ததோடு அமைச்சர் என்ற முறையில் தாம், செய்யும் தவறையும் சுட்டிக்காட்டுமாறும் கூறினார்.
வருடந்தோறும் 500 மில்லியன் டொலருக்கும் மேல் இதற்காக செலவிடுவதாகவும் அதற்கு ஒரே தீர்வு இந்நாட்டிலேயே மருந்துகளை உற்பத்தி செய்வது எனவும் அவர் தெரிவித்தார் .