2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட விடயங்களை அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படுத்தினால், முழுமையான பயனை நாட்டு மக்கள் பெற்றுக் கொள்வார்களென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கல்வித் துறையின் மறுசீரமைப்புக்கு வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும்,நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.அதனைத் தொடர்ந்து வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலேயே வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
குறுகிய அரசியல் நோக்கங்களின்றி உண்மையை மக்களிடம் ஆளும் மற்றும் எதிர்தரப்பினர் தெரிவித்தால், மக்கள் அதனை ஏற்றுக்கொள்வார்கள்.
வரவு செலவுத் திட்டம் பயனற்றது என்று முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று குறிப்பிட முடியாது.ஒருமாத கால விவாதத்தை தொடர்ந்து குறைபாடுகளை திருத்திக் கொள்ளலாம்.
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் நடைமுறைக்கு சாத்தியமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வரவு செலவுத் திட்டத்தில் கல்வித் துறை மறுசீரமைப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.நவீன உலகத்துக்கு பொருந்தும் வகையில், கல்வித் துறை மாற்றமடைய வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)