2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிலையான பொருளாதார கொள்கையை இலக்காகக் கொண்டதென, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
அதேவேளை, சகல தரப்பினராலும் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்ற முடியாது என்பதை சுட்டி காட்டிய அவர்,2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிலையான பொருளாதார கொள்கையை இலக்காகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர, அரச ஊழியர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் நோக்கம் எதுவும் அரசாங்கத்துக்கு கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், சகல தரப்பினரது கோரிக்கைகளையும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்ற முடியாது.
நாட்டில் பொருளாதார நெருக்கடி உள்ளதே தவிர அரசியல் நெருக்கடி கிடையாது என்பதை, எதிர்க்கட்சிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பாரிய நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில்தான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.இதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வரவு செலவு திட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் புகழாரம் பாடிவிட்டு, குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மக்கள் மத்தியில் வரவு செலவுத் திட்டத்தை விமர்சிப்பது முறையற்றது.
கடந்த ஒருவருட காலமாக அரசியல் நோக்கமில்லாமல் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாலேயே, நாடு சற்றேனும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் யோசனைகள் தொடர்பாக நிச்சயம் கவனம் செலுத்தப்படும்.
எதிர்க்கட்சிகளை புறக்கணித்து, நாம் ஒருபோதும் செயற்படப் போவதில்லை.
பொருளாதார முன்னேற்றத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்